முத்துராமலிங்க தேவர் ஒரு சாதி அடையாளமாக மாற்றி நிறுத்தப்பட்டிருப்பது பெரிய அவமானம்: சீமான்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஒரு சாதி அடையாளமாக மாற்றி நிறுத்தப்பட்டிருப்பது மிகப் பெரிய அவமானம் என கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஒரு சாதி அடையாளமாக மாற்றி நிறுத்தப்பட்டிருப்பது பெரிய அவமானம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற மருதுபாண்டியர் வீர்வணக்க நாள் நிகழ்வில் சீமான் பேசியதாவது:

எங்கள் கடந்த காலத்தை குனிந்து பார்க்கிறோம்... நிகழ்காலத்தில் நிமிர்ந்து நிற்பதற்காக...
எங்களது அருமை பெரும்பாட்டன்கள் மருதிருவர், எங்கள் மூதாதை பூலித்தேவன், எங்களுடைய முப்பாட்டன் தீரன்சின்னமலை, எங்களது அருமை பெரும்பாட்டன்கள் அழகு முத்துகோன், சுந்தரலிங்கனார் போன்றோரெல்லாம் ஒரு சாதியக் குறியீடாக நிறுத்தப்பட்டிருப்பது தமிழ்த் தேசிய இனத்துக்கு பெருத்த அவமானம். நிகழ்ந்த வரலாற்று துரோகம்.
தீரன் சின்னமலை ஓடாநிலையைவிட்டு ஓரடி நகரலை

எங்கள் அருமை பெரும்பாட்டன்கள் மருதிருவர் காளையார்கோவிலை விட்டு கால் கிலோ மீட்டர் நகரலை
மானமறத்தி எங்கள் அப்பத்தா வேலுநாச்சியார் சிவங்கை மண்ணைவிட்டு அரைஅங்குலம் நகரலை
பூலித்தேவன் நெற்கட்டும்சேவலைவிட்டு ஒரு கட்டு நகர்ந்து நிற்கலை
ஆனால் மராட்டிய மன்னர் சிவாஜி தமிழகத்தின் தெருக்கள் எங்கும் நிறைந்து நிற்கிறார்... அதற்கு காரணம் என்ன?
தமிழர்கள் வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட அடையாளம் தெரியாமல் அடித்தொழிக்கப்பட்ட இனத்தின் மக்களாக இருக்கிறார்கள்.

அண்ணல் அம்பேத்கர் சொல்கிறார் என் அன்புக்குரிய சொந்தங்களே!
வரலாற்றில் மறைக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள் ஒருநாள் தமக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள் என்று சொல்கிறார். ஆனால் இன்றைக்கு நிலை என்ன?
லண்டனில் நாம் தமிழர் கட்சியின் வீரத் தமிழர் முன்னணி, ஐக்கிய வீரத் தமிழர் முன்னணி தொடங்கி ஆண்டுதோறும் நடக்கும் பொங்கல் விழாவிலே எந்த வெள்ளை ஏகாதிபத்தியத்தை எமது அருமை பாட்டன்களும் பாட்டியரும் போரிட்டார்களோ அந்த நிலத்திலேயே வேலுநாச்சியார் படம், தீரன் சின்னமலை படம், பூலித்தேவன் படம், மருது பாண்டியர் படம் வைத்து அவர்களுடைய பெருமையை போற்றப்படுகிறது.

இது ஒரு வரலாற்றுப் பெருமாற்றம். இந்த மருது பாண்டியர் நிகழ்வை கூட்டத்தை காளையார்கோவிலில் நடத்தியிருக்கலாம். நடத்தலாம்... நடத்த வேண்டும். ஆனால் அனுமதி இல்லை.
போன ஆண்டு சேலத்தில் நடத்தினோம்... இந்த ஆண்டு சென்னையில் நடத்துகிறோம். உலகெங்கும் தமிழன் வாழுகிறான். வாழுகிற நிலத்தில் எல்லாம் நம் குலப் பெருமையை இனமுன்னோர்களின் நினைவை கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் பிள்ளையின் கடமை.
மருது பாண்டியர் மண்ணிலே இன்று இந்த கூட்டத்தை நடத்த அனுமதி இல்லை. தடை...144 தடை அதை உடைத்து எறிகிற காலம் விரைவில் உருவாகும் என்பதுதான் உண்மை.
ஒரு சாதிக்கு சொந்தக்காரர்காளா மருது பாண்டியர்கள்? என் அன்பிற்குரிய உறவுகளே! அருமை தம்பி தங்கைகளே!
சாதிய எண்ணம் கொண்டவன் அரசியலில் புகுந்தால் நாடு நாசமாகிவிடும்; சாதிய சிந்தனை உள்ளவன் இறைவனை வழிபடுவதற்கே தகுதியற்றவன்.... இதை சொன்னவர் தெய்வத் திருமகன் நமது அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

அவர் ஒரு சாதி அடையாளமாக மாற்றி நிறுத்தப்பட்டிருப்பது எவ்வளவு பெரிய அவமானம்; எவ்வளவு பெரிய இழிவு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அன்றைக்கு வைத்தியநாத அய்யர், கோவில் நுழைவுப் போராட்டம்- தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் செல்லக் கூடாது; தெருக்களில் நடக்கக் கூடாது; வழிபடக் கூடாது என்று அந்த இறுக்கம், கொடுமை இருந்த காலகட்டத்தில் 'வைத்தியநாத அய்யர் தாழ்த்தப்பட்ட மக்களை கூட்டிக் கொண்டு கோவிலுக்குள் நுழைகிறபோது, நீங்கள் தைரியமாக அழைத்துச் செல்லுங்கள்; நான் உங்களுக்குத் துணையாக இருப்பேன் என்று முழக்கமிட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்பதை வரலாறும் மறக்காது.
ஆனால் அவர் இன்றைக்கு ஒரு சாதியத் தலைவர் போலவும் சாதிய வெறியர் போலவும் காட்டப்பட்டிருப்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை இந்த தலைமுறை தமிழ்ப் பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாம் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சி.
தமிழன் சாதி மதங்களாக பிளந்து பிரியாதவரை தமிழர் நிலத்தை தமிழன் அல்லாதவன் ஆளமுடியாது என்பதால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட சதி.
இவ்வாறு சீமான் பேசினார்.












Click it and Unblock the Notifications