திருவண்ணாமலையில் பவழக்குன்று மலை ஆக்கிரமிப்பு... நித்தி சீடர்கள் 7 பேர் கையில் காப்பு!
பவழக்குன்று மலையை ஆக்கிரமித்து பூஜை செய்த நித்தியானந்தா சீடர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை : பவழக்குன்றில் மீண்டும் ஆசிரமம் அமைத்து பூஜை செய்த நித்தியானந்தா சீடர்களான 2 பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள அழகிய மலைப் பகுதியை பௌர்ணமி நாளில் சுற்றி வந்து பக்தர்கள் அருணாச்சலேஸ்வரை வழிபட
கிரிவலப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிரிவலப்பாதையை ஒட்டி அமைந்துள்ள பவழக்குன்று மலையை ஆக்கிரமிக்கும் பணியில் நித்தியானந்தா சீடர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 16ம் தேதி பவழக்குன்று மலையை ஆக்கிரமித்து, இங்கு தான் நித்தியானந்தா தவம் இருந்து முக்தி பெற்றார் என்ற கதையை அள்ளி விட்டு அங்கு பூஜை செய்யத் தொடங்கியது நித்தி கோஷ்டி. இதனை எதிர்த்து மலையடிவாரத்தில் இருந்த மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

ஆக்கிரமிக்க முயற்சி
ஆனால் சாமர்த்தியமாக செயல்பட்ட நித்தி சீடர்கள் அங்கு 3 ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டு ஆசிரமம் கட்ட முயற்சித்து செங்கல், மணல் உள்ளிட்டவை கொட்டப்பட்டன. ஆத்திரமடைந்த மக்கள் அவர்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தி மலையை விட்டு செல்லுமாறு தகராறு செய்தனர்.

நடவடிக்கை
இதனையடுத்து ஆர்டிஓ உமாமகேஸ்வரி உத்தரவுப்படி போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவர்களை வெளியேற்றினர். இந்நிலையில் சூட்சமமாக செயல்பட்ட நித்தியானந்தா சீடர்கள் பூஜை நடத்த திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றவிட்டதாகக் கூறி தொடர்ந்து பூஜைகள் செய்யும் பணியைத் தொடங்கினர்.

கைது
இதனால் திருவண்ணாமலை மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்து நித்தியானந்தா சீடர்களை வெளியேற்ற கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து 2 பெண்கள் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அங்கிருந்த ஆக்கிரமிப்பு கூடாரங்களையும் அகற்றினர்.

சர்ச்சை சாமியார்
நித்தியானந்தாவின் படுக்கை அறை காட்சிகள் ஊடகங்களில் வெளியானதால் சர்ச்சையில் சிக்கினார் . இவர் மீது பல்வேறு புகார்களோடு, பொது நிலத்தை ஆக்கிரமித்து ஆசிரமம் அமைப்பவர் என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications