பழ.கருப்பையா வீடு மீது தாக்குதல்: இதுதான் அமைதிப்பூங்கா தமிழகமா? முஸ்லிம் லீக் கேள்வி
சென்னை: பழ .கருப்பையா வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த சில நாட்களுக்கு முன் பழ.கருப்பையா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அது விசயமாக நிருபர்களை சந்தித்து பேசினார். தன்னுடைய எம்.எல்.ஏ.பதவியை கூட ராஜினாமா செய்துவிட்டார். அது ஒரு கட்சியின் உள் விவகாரம். அது விசயமாக நாம் கருத்து சொல்ல விரும்பவில்லை.
ஆனால் ,நேற்று இரவு பழ.கருப்பையா இல்லத்திற்கு முன் கூடிய சில விஷமிகள், ஐயாவை தரக் குறைவாக திட்டியதோடு, அவர்கள் வீட்டின் மீதும், அங்கு நின்றுகொண்டிருந்த காரின் மீதும் கற்களாலும், கட்டைகளாலும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த வன்முறை சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
வன்முறை தாக்குதல் நடத்திய விஷமிகளை உடனடியாக தமிழக அரசு கைது செய்து தண்டிக்க வேண்டும் .சில நாட்களுக்கு முன்புதான் ஜெயலலிதா தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்று கூறினார். அது உண்மையாக இருக்குமானால் இந்த தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்வதோடு, பழ.கருப்பையா அவர்களுக்கும் ,அவர் வீட்டிற்கும் உரிய பாதுகாப்பு அழிக்க வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.