சசிகலா சொத்து சேர்க்க காரணமானவர் ஜெயலலிதா மட்டுமே... முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா
சசிகலா சொத்து சேர்க்க காரணமாக இருந்தவர் ஜெயலலிதாதான் என்று முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா தெரிவித்தார்.
சென்னை : சொத்து சேர்த்தது என்னவோ சசிகலாவாக இருக்கலாம். ஆனால் அதற்கு காரணமாக இருந்தவரே ஜெயலலிதாதான் என்று முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா தெரிவித்தார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பழ.கருப்பையா. அப்போது ஆட்சியாளர்களுக்கு எதிராகவு்ம, கட்சியின் பொதுக் குழு தீர்மானத்துக்கு எதிராகவும், அமைச்சர்களை மோசமாக விமர்சித்தும் துக்ளக் விழாவில் கருத்து தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சிறிது காலத்துக்கு பின்னர் அதிமுகவிலிருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார். இதையடுத்து துறைமுகம் தொகுதிக்கான எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
தூய மனிதர் அல்ல
சசிகலா குடும்பத்தினர், போயஸ் கார்டன் ரெய்டு உள்ளிட்டவை குறித்து சன் டிவியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா பேசுகையில், போயஸ் கார்டனில் ஏன் ரெய்டு நடத்தக் கூடாது. கோயிலுக்கு உரியவராக தெய்வமாக பூஜிக்கப்பட வேண்டியவர் இரு முறை சிறை தண்டனை பெற்றவரை தூய மனிதர் என்று கூறுபவர்கள் கோமாளிகள்.
அனைவரையும் விசாரிக்க வேண்டும்
ரூ.2.5 லட்சம் கோடி மதிப்பிலான சொத்து சசிகலா குடும்பத்தினரின் கையில் உள்ளது. எனவே இந்த விசாரணை வளையத்தினுள் அதிமுக அரசு, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.கக்கள் என அனைவரையும் கொண்டு வரவேண்டும். முதல்வரும், துணை முதல்வரும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குக் கூட தகுதியற்றவர்கள். பல லட்சம் கோடி பணம், சொத்து சசிகலாவின் கையில் இருக்கலாம். ஆனால் அதை கொண்டு வந்து சேர்த்தது ஜெயலலிதாதான்.
வரியில்லா அரசாங்கம்
சசிகலாவிடம் உள்ள 2.5 லட்சம் கோடி பணத்தில் ரூ.1 லட்சம் கோடியை தமிழக அரசின் கடனை அடைக்கலாம். மீதமுள்ள பணத்தில் ஓராண்டுக்கு வரியே போடாமல் இந்த அரசை நடத்தலாம். இவர்கள் மீது ஏன் வருமான வரி துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நான் கேட்கமாட்டேன். அவர்கள் மீது எடுக்கவில்லை என்று தான் நான் கேட்கிறேன். ஏனெனில் சட்டம் என்பது பொதுவான ஒன்று.
ஆளுநர் ஆய்வை ஏற்க முடியாது
ஆளுநர் மூலமாக தமிழகத்தில் போட்டி ஆட்சியை மோடி நடத்துகிறார். முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக எம்எல்ஏக்கள் கொடுத்த கடிதத்தின் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை விட்டுவிட்டு ஆளுநர் ஆய்வு நடத்துவதை ஏற்க முடியாது என்றார் பழ.கருப்பையா தெரிவித்தார்.