தமிழர்களை சுட்டுக்கொன்றவரின் பெயரைச் சூட்டுவதற்கு மோடி துணை போவதா? பழ. நெடுமாறன் கண்டனம்
சென்னை: இலங்கையில் 9 தமிழர்களை சுட்டுக்கொன்ற துரோகி ஆல்பர்ட் துரையப்பா பெயர் சூட்டப்பட்ட யாழ்ப்பாணம் திடலை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்ததற்கு உலக தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு ஆல்பர்ட் துரையப்பா என்பவரின் பெயரை சிங்கள அரசு சூட்டி, இந்தியப் பிரதமர் மோடியைக் கொண்டு அந்தப் பெயர் பலகையைக் காணொளிக் காட்சியின் மூலம் திறக்க வைத்துள்ளது. சிங்கள அரசின் சூழ்ச்சிக்கு இந்தியப் பிரதமர் இரையானது வருந்தத்தக்கதாகும்.

1975ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இதே திடலில் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது, அதைத் தடுக்க யாழ்ப்பாண மேயராக இருந்த ஆல்பர்ட் துரையப்பா தீவிர முயற்சி செய்தார். அம்மாநாட்டில் கலந்துகொண்ட மக்கள் மீது சிங்கள காவல்படையை ஏவி 9 தமிழர்கள் படுகொலையானதற்கும் அவரே காரணம்.
பஞ்சாப் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயரின் பெயரை அந்தத் திடலுக்குச் சூட்டினால் அது எத்தகைய மன்னிக்க முடியாத செயலோ, அதைப் போன்ற செயல்தான் யாழ் திடலுக்கு துரையப்பாவின் பெயரைச் சூட்டியதாகும்.
இதே திடலில் படுகொலையான 9 தமிழர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தை சிங்கள இராணுவம் இடித்துத் தகர்த்துவிட்டது. அதே இடத்தில் மீண்டும் அந்த நினைவுச் சின்னத்தைக் கட்டுவதற்குப் பதில், அவர்கள் கொலை செய்யப்படுவதற்குத் துணையாக நின்ற ஒருவரின் பெயரைத் திடலுக்குச் சூட்டுவது வெந்தப்புண்ணில் வேலைச் செருகுவது போலாகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications