'அரசு அலுவலகங்களில் லஞ்சத்தைத் தடுக்க பேனா காமிரா'- திராவிட மக்கள் கழகம் பலே ஐடியா!
சென்னை: அரசு அலுவலகங்களில் ஊழலை ஒழித்திடவும் லஞ்சம் வாங்குவதைத் தடுத்திடவும் தமிழகம் முழுவதும் தி.ம.மு.க. தொண்டர்களுக்கு ரகசிய கண்காணிப்பு பேனா காமிரா வழங்கப்பட்டு உள்ளதாக, அதன் நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்தக் கட்சியின் துவக்கவிழா நடைபெற்றது. அப்போது கட்சியின் நிறுவனரும் தலைவருமான ஜெகநாத் மிஸ்ரா கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி, தலைமை உரையாற்றினார்.

அப்போது அவர் பேசும் போது, "தமிழகம் வளமையான நாடு. செல்வச் செழிப்பு கொண்ட தேசம். ஆனால் லஞ்சத்தாலும் ஊழலாலும் பொருளாதாரம் ஏற்றத் தாழ்வுடன் திகழ்கிறது. அதனைக் களைந்தாலே, நாடு முன்னேற்றம் கண்டுவிடும்.
எனவே முதல்கட்டமாக, தமிழகம் முழுவதும் தி.ம.மு.க.வின் ஆயிரம் தொண்டர்களுக்கு கண்காணிப்பு பேனா காமிரா வழங்கப்பட்டுள்ளது," என்றார்.

இந்தக் கட்சியின் தொண்டர்கள் மறைமுகமாக செயல்பட்டு, லஞ்சம் வாங்குவதை காமிரா பேனாவைக் கொண்டு வீடியோவாகப் படம் பிடிப்பார்கள். அதனை ஊடகங்களின் மூலமாகவும் வெளிப்படுத்துவார்கள். இதன் காரணமாக, படிப்படியாக ஊழலும் லஞ்சமும் குறையும் என்றார்.
மேலும் விவசாய மாநிலமான தமிழகத்தில், சமீபகாலமாக விவசாயம் அழிந்து வருகிறது. விவசாயிகள் பலரும் தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். காவிரி டெல்டா மாவட்டங்களில், விவசாயிகளின் போராட்டம் தொடர்கதையாகவே உள்ளது. இந்த நிலையைக் களைந்திட, விவசாயிகளின் நலனைப் பாதுகாத்திட, பாடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் உலகத் தமிழர்களின் நலனைப் பேணிக் காத்தல், அனைவருக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, கச்சத் தீவுப் பிரச்னையில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டுதல் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகளுக்காக பாடுபடப் போவதாகவும் தெரிவித்தார்.
கூட்டத்தில், தமிழகம் முழுவதிலுமிருந்து அக் கட்சியின் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications