என்ன அநியாயம்... 40 லிட்டர் பாலில் 20 லிட்டர் தண்ணீரைக் கலந்த எமகாதகர்கள்.. விரட்டிப் பிடித்த மக்கள்
கோவை: கோவை அருகே ஒரு கூட்டுறவு பால் சொசைட்டியில் அளவுக்கு அதிகமாக பாலில் தண்ணீர் கலந்ததால் மக்கள் கொதிப்படைந்து அந்த நிறுவனத்தின் பால் வண்டியை சிறை பிடித்து போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையை அடுத்த சூலூர் அருகேயுள்ள செலக்கரிச்சலில் கூட்டுறவு பால் சொசைட்டி உள்ளது. இந்த சொசைட்டிக்கு சின்னக்குயிலி, போகம்பட்டி, திம்மநாயக்கன் பாளையம், லட்சுமணநாயக்கன் பாளையம், கள்ளபாளையம், பாப்பம்பட்டி, செலக்கரிச்சல் உள்பட 12 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் பால் சப்ளை செய்கிறார்கள்.

தினமும் 5 ஆயிரம் லிட்டருக்கும் அதிகமாக பால் சப்ளை செய்யப்படுகிறது. பால் உற்பத்தியாளர்களிடம் எந்த கலப்படமும் இல்லாத வகையில் பால் வாங்கும் சொசைட்டியினர் பின்னர் பாலில் அதிக அளவில் தண்ணீர் கலப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
அதாவது 40 லிட்டர் பாலில் 20 லிட்டர் தண்ணீர் கலந்து அதனை ஆவின் நிறுவனத்துக்கு அனுப்பி வைப்பதாக பால் உற்பத்தியாளர்கள் கூறினார்கள். இந்த நிலையில் இன்று காலை பால் சொசைட்டியில் இருந்து பால் ஏற்றி வந்த வேனை பால் உற்பத்தியாளர்களும், பொதுமக்களும் சிறை பிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சூலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாலில் தண்ணீர் கலப்பதை கையும், களவுமாக பிடித்துள்ளோம். இதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் தான் இங்கிருந்து செல்வோம் என்று கூறினர்.
இந்தப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.












Click it and Unblock the Notifications