உயிர்தான் சாமி முக்கியம்.. திருடிய கலசங்களைப் போட்டுவிட்டு தப்பிய திருட்டுக் கும்பல்!
செங்கோட்டை: செங்கோட்டையில் வாகனம் விபத்துக்குள்ளாகியதும் உயிர் பயத்தில் திருடிய கலசங்களை போட்டுவிட்டு தப்பிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கோட்டை அருகேயுள்ளது பண்பொழி கிராமம் இங்கு மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட அர்த்தநாரிஸ்வரர் ஆலயம் உள்ளது. நேற்று நள்ளிரவு மர்ம கும்பல் ஓன்று கோவிலின் கோபுரத்திலுள்ள தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசங்களை கொள்ளையடித்து சென்றுள்ளது. அவர்கள் செல்லும் வழியில் ஒரு சுடலைமாடன் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு அருகே சென்றபோது அவர்கள் திருடி சென்ற கலசங்களில் ஒரு கலசம் கீழே விழுந்துள்ளது. அதை எடுக்க திரும்பியபோது அவர்களது வாகனம் அருகிலுள்ள வயலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இதனால் உயிருக்கு பயந்துப்போன அக்கும்பல் திருடிய கலசங்களை அப்படியே போட்டுவிட்டு தப்பியோடியுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று காலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோபுரத்தில் கலசம் இல்லாமல் இருப்பதைப் பார்த்து பூசாரியிடம் கேட்கவே அவர் அதிர்ச்சியடைந்து உடனடியாக அச்சன்புதூர் போலீசில் புகார் செய்தார்.
அதனைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் தீவிரமாக அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தவே சுடலை மாடன் கோவிலுக்கு அருகே திருடப்பட்ட கலசங்கள் கிடப்பதும், வாகனம் வயலுக்குள் விழுந்து எழுந்து சென்றதையும் கண்ட போலீசார் கலசங்களை கைப்பற்றி வழக்கு பதிவுசெய்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.
திருடன் தப்பினால் தப்பட்டும், திருடப்பட்ட கலசங்கள் திரும்ப கிடைத்ததே என்ற மகிழ்ச்சியில் பக்தர்கள் உள்ளனர்.