ஆட்டை கபளீகரம் செய்த மலைப்பாம்பு- வணங்கி காட்டுக்குள் விட்ட மக்கள்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பை வணங்கி தூக்கிச்சென்று மக்கள் காட்டுக்குள் பத்திரமாக விட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள மேடுப்பள்ளியை சேர்ந்தவர் விவசாயி முனியப்பா. இவர் நேற்று தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு ஓட்டி சென்றார்.

மேய்ந்துகொண்டிருந்த ஆடு ஒன்றின் அலறல் சத்தம் கேட்ட முனியப்பா சத்தம் வந்த திசையை நோக்கி சென்றார். அங்கு முட்புதருக்குள் இருந்த, 14 அடி நீள மலைப்பாம்பு முனியப்பாவின் ஒரு ஆட்டை பிடித்து விழுங்கி கொண்டிருந்தது.
இதை பார்த்த முனியப்பா ஆட்டை மீட்பதற்காக அங்கிருந்து ஓடிவந்து மேடுப்பள்ளி கிராம மக்களை அழைத்து கொண்டு வனப்பகுதிக்கு சென்றார். அதற்குள் ஆட்டை முழுவதும் மலைப்பாம்பு விழுங்கியது.
இதனால் பொதுமக்கள் அனைவரும் மலைப்பாம்பை வணங்கி விட்டு கெட்டூர் காப்பு காட்டிற்கு மலைப்பாம்பை தூக்கி சென்று விட்டனர். அங்கு மலைப்பாம்பு ஆட்டை வெளியே கக்கியது. மலை பகுதியில் உள்ள மக்கள் யானை,குரங்கு, மற்றும் பாம்புகளை கடவுளாக வணங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications