அதிமுக, திமுகவுக்கு தலை சுற்றுது.. ஹரி நாடார் பிரச்சாரத்தில் கூட்டம் அள்ளுது.. "ஆச்சரிய" ஆலங்குளம்
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டசபை தொகுதியில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக மோதுகின்றன. இரு கட்சிகளிலும் மக்களிடம் வெகு பிரபலமான வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர்.
ஆனால் பனங்காட்டு படை கட்சி சார்பில் போட்டியிடும் ஹரி நாடார் பிரச்சாரத்துக்கு செல்லும்போதுதான் கூட்டம் அள்ளுகிறதாம்.
அதுவும் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள்.
ஆலங்குளத்தில் ஸ்டார் வேட்பாளர்கள்
ஆலங்குளத்தில் திமுக சார்பில் போட்டியிடுபவர், ஏற்கனவே மக்களால் நன்கு அறியப்பட்ட பூங்கோதை ஆலடி அருணா. சிட்டிங் எம்எல்ஏ அவர்தான். இன்னொரு பக்கம், அதிமுக தரப்பில் முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியன் மகன் மனோஜ் பாண்டியன் போட்டியிடுகிறார். இவரும் நாடறிந்த சட்ட வல்லுநர். இப்படி இரு பெரிய கட்சிகள் சார்பிலும் ஸ்டார் வேட்பாளர்கள் களம் காணும் தொகுதி ஆலங்குளம். இதனால் அனல் பறக்க பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெண்கள் கூட்டம்
நிலைமை இப்படி இருக்க.. இந்த இரு வேட்பாளர்களுக்கு பிரச்சாரங்களில் கூடும் கூட்டத்தை விட பனங்காட்டு படை கட்சியின் ஹரி நாடார் பிரச்சாரக் கூட்டங்களுக்குதான் அதிக அளவில் கூட்டம் சேர்கிறது. அதிலும், பெண்கள் கூட்டம் அதிகமாக வருகிறது என்பதுதான் ஆச்சரியமான கள நிலவரம்.
நடமாடும் நகைக் கடை
ஹரி நாடார் பிரச்சார பேச்சு அப்படியே இழுத்து எல்லோரையும் அழைத்து வருகிறதா என்றால், இல்லை என்பதுதான் பதில். இத்தனை கூட்டத்துக்கும் காரணம் அவர் உடலில் அணிந்திருக்கும் பளபள நகைகள்தான். ஒரு நடமாடும் தங்க கடை போல காட்சியளிப்பவர் ஹரி நாடார். பிரச்சாரத்துக்கு செல்லும்போதும் கைகள், கழுத்து நிறைய நகைகளை அள்ளி அணிந்து கொண்டு அவர் சொல்கிறார்.
ஹரி நாடார் நகை மதிப்புகள்
11 ஆயிரத்து 200 கிராம், அசையும் சொத்துக்கள் வைத்திருக்கும் ஹரி நாடாரின், கழுத்திலும், கையிலும் மட்டும் சுமார் 3 கிலோ தங்க நகைகள் உள்ளன. மற்றவை வீட்டினர் பயன்படுத்துகிறார்கள். அதாவது அவர் கையிலும் கழுத்திலும் அணிந்துள்ள நகைகளின் மதிப்பு சுமார் ஒன்றே கால் கோடியை விட அதிகம்
நகை மதிப்பு
பொதுவாகவே நகைகள் மீது பெண்களுக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும். அதிலும், ஆண் ஒருவர் இத்தனை நகைகளை அணிந்து கொண்டு இருக்கிறார் என்றால் அதை பார்ப்பவர்களுக்கு ஒரு அலாதி பிரியம். மேலும், அந்த நகைகள் எந்த மாடலில் செய்யப்பட்டிருக்கின்றன, ஒவ்வொரு நகையும் எத்தனை பவுன் இருக்கும் என்றெல்லாம் பெண்கள் கூடி கூடி பேசிக் கொள்வதற்கு இது வசதியாக இருக்கிறது. எனவேதான், ஹரி நாடார் பிரச்சாரத்திற்கு பெண்கள் கூட்டம் அதிகமாக வருகிறது என்கிறார்கள்.
சிம்பிளாக கூட்டம்
ஆயிரம்தான், களத்தில் உழைத்து தொண்டர்களை அழைத்து வர பிற கட்சிகள் நினைத்தாலும், தனது நகை ஆபரணங்களால், எளிதாக கூட்டத்தை கூட்டி வருகிறார் ஹரி நாடார். இப்படித்தான் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் விடவும் அதிகமாக வாக்குகளைப் பெற்றார் ஹரிநாடார். இதனால் எங்கே ஆலங்குளம் தொகுதிகளும் பெருமளவு வாக்குகளை பிரித்து பெரிய கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக வந்துவிடுவாரோ என்று அந்த கட்சி நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளார்கள் என்கிறது தென்காசி வட்டாரத் தகவல்.