ஆசிரியைகளைத் தரக்குறைவாக பேசிய அதிமுக நிர்வாகி- புதுக்கோட்டை அருகே மக்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை: பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டது தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற ஆசிரியைகளை தரக்குறைவாக பேசிய அதிமுக தொழிற்சங்க நிர்வாகியைக் கண்டித்து புதுக்கோட்டை அருகே மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ளது மேற்பனைக்காடு கிராமம். இங்குள்ள பள்ளிகளுக்கு வெளியூரில் இருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் பேருந்து மூலமாக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், அந்த மார்க்கத்தில் செல்லும் சில அரசு பேருந்துகள் அதிரடியாக நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்ல முடியாமல் ஆசிரியர்கள், மாணவர்களும் தவித்து வந்தனர்.
இது தொடர்பாக அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் துரை.கோவிந்தராசு மற்றும் பிடிஏ தலைவர் சண்முகம் ஆகியோர் தலைமையில் மக்கள் அறந்தாங்கி போக்குவரத்து கழக அலுவலகம் சென்று முறையிட்டனர். அப்போது அங்கிருந்த அங்கிருந்த அதிமுக தொழிற் சங்க செயலாளர் மூர்த்தி என்பவர், ‘50 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஆசிரியைகள் கார் வாங்கி போக வேண்டியது தானே' என தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.