தொகுதி மாறினால் ரூ. 25 கொடுத்து புது அடையாள அட்டை பெறலாம் - தலைமை தேர்தல் அதிகாரி சக்சேனா
சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் போன்றவற்றுக்காக 3 கட்டங்களாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்களை ஆர்வமுடன் அளித்தனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "சிறப்பு முகாம்கள் மூலம் 20 லட்சத்து 15 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்காக 15 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மீதம் உள்ள விண்ணப்பங்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் செய்வதற்காக பெறப்பட்டுள்ளன.
முகவரி மாற்றம் செய்ய விரும்புகிறவர்கள் பழைய வாக்காளர் அட்டையை பயன்படுத்திக்கொள்ளலாம். பூத் சிலிப்பில் முகவரி மாற்றம் செய்து வழங்கப்படும். இதனை பயன்படுத்தி ஓட்டு போடலாம். முகவரி மாற்றம் செய்யப்பட்டவர்கள் தனியாக வாக்காளர் அடையாள அட்டை வேண்டும் என்றால் ரூபாய் 25 செலுத்த வேண்டும்.
புதிதாக பெயர் சேர்க்க விரும்புகிறவர்கள் பெயர் சேர்க்கும் படிவம் 6 உடன் "001" படிவத்தையும் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இந்த விண்ணப்பம் ஆன் லைனில் இருப்பதால் அதன் மூலமும் விண்ணப்பிக்கலாம். கிராம அளவில் வீடுகள் தோறும் தேவைப்படுபவர்களுக்கு 001 விண்ணப்பம் வழங்கப்பட உள்ளன.
இந்த விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிப்பவர்களுக்கு விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதை தெரிந்துகொள்வதுடன், எப்போது வாக்காளர் அட்டை வந்து கிடைக்கும் என்ற தகவலும் விண்ணப்பதாரரின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வரும். புதிதாக பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பம் அளிப்பவர்களுக்கு இலவசமாகவும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.