அனல் பறக்கும் தேர்தல் களம்...மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் 104 தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நலக் கூட்டணி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட உள்ளது. அந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளார்.
வரும் சட்டசபைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா கட்சிகள் ஓரணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. தேமுதிக 104 இடங்களிலும், தமாகா 26 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக 29 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் 25 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் 25 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இந்த அணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, தமாகா கட்சிகள் ஏற்கெனவே தனித் தனியே தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டன. இந்த நிலையில் மக்கள்நல கூட்டணியில் அங்கம் வகித்துள்ள ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது.
இந்த விழா, சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
ஏற்கனவே திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தேர்தல் பிரசாரத்தையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதேபோல் அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியும் நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இன்னும் அதிமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. இந்நிலையில் மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது.












Click it and Unblock the Notifications