வறட்சியா இருக்கு, எல்லோரும் சாமி கும்பிடுவோம்.. சொல்வது அமைச்சர் வேலுமணி!
தமிழகத்தில் வறட்சி நிலவுவதால் மக்கள் தண்ணீரை சிக்கனமா பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் எஸ்பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுவதால் மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர் மழை வரவேண்டும் என கடவுளை வேண்டுவோம் என்றும் கூறினார்.
அமைச்சர் எஸ்பி.வேலுமணி சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் வறட்சி நிலவுவதாக கூறிய அவர் குடிநீரை மக்கள் சிக்கனமாக குடிக்க வேண்டும் என கூறினார்.
பருவமழைகள் பொய்த்து விட்டன என்று கூறிய அவர் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க 923 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், தற்போது இருப்பில் உள்ள தண்ணீரை பகிர்ந்து அளித்து வருவதாகவும் தெரிவித்தார்,
நிலைமையை உணர்ந்து பொதுமக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். கைப்பம்புகளை சீரமைக்கும் பணிகளும் துவங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் வேலுமணி, தமிழகம் முழுவதும் 1000 தண்ணீர் தொட்டிகளை புனரமைக்கும் பணிகள் நடைபெறுவதாக கூறினார்.
குடிநீர் சிக்கனம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு தேவை என்ற அவர், மழை வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார். மேலும் மழை வரவேண்டும் என்று கடவுளை வேண்டுவோம் என்றும்ட அமைச்சர் வேலுமணி கூறினார்.