சசி கூடாரத்திலிருந்து தப்பிய கோவை எம்எல்ஏவை கொண்டாடும் மக்கள்!
சசிகலா ஆதரவு எம்எல்ஏவாக இருந்து தப்பியோடிய கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவை மக்கள் கொண்டாடுகின்றனர்.
கோவை: சசிகலா குரூப்பின் கட்டுப்பாட்டில் இருந்து கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் நேற்று தப்பிச்சென்றார். சசிகலாவின் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது தரப்பில் இருந்து வெளியேறிய எம்எல்ஏ அருண்குமாரை அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதிகாரப் போட்டியால் அதிமுக இரண்டாக உடைந்த போது கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அருண்குமார் சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து அவரும் கடந்த 10 நாட்களாக கூவத்தூர் ரிசார்ட்டில் மற்ற எம்எல்ஏக்களுடன் சேர்த்து கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் நேற்று மாலை ரிசார்ட்டில் இருந்து வெளியேறி சொந்த ஊருக்கு சென்றார். சசிகலா தலைமையிலான அதிமுகவை பிடிக்கவில்லை என்று கூறிய அவர் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட போவதாக தெரிவித்தார்
மேலும், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பதாகவும் அவர் கூறினார். அதிமுகவின் தற்போதைய தலைமையின் செயல்பாடு தொண்டர்கள் விரும்பும் வகையில் இல்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அருண்குமாரை அப்பகுதி மக்கள் மற்றும் கட்சியினர், அவரது ஆதரவாளர்கள் அவரது வீட்டுக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். மாலை மற்றும் சால்லை அணிவித்த அவர்கள் இனிப்புகளை கொடுத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சசிகலா தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய எம்எல்ஏ அருண்குமாரை அப்பகுதி பெண்கள் மற்றும் மூதாட்டிகளும் வாழ்த்தினர்.