ஜெ.,பணத்தை வைத்து கொண்டு வெற்றி பெறலாம் என நினைக்கிறார்... ஒரு போதும் நடக்காது: வைகோ தாக்கு
நாகர்கோவில்: பணத்தை வைத்து கொண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெறலாம் என்று ஜெயலலிதா நினைக்கிறார். அது ஒரு போதும் நடக்காது என மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறியுள்ளார்.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி இணைந்தவுடன் அக்கட்சியின் தலைவர்கள் பங்கேற்கும் முதல் கூட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் திங்கள்கிழமை இரவு நடந்தது. தேமுதிக சார்பில் அக்கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர் சந்திரகுமார் கலந்து கொண்டார். மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய சந்திரகுமார், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி சின்னங்களை சொல்லி இங்கிருந்துதான் முதல் முதலாக வாக்கு சேகரிக்கிறோம். அதனால் இந்தக் கூட்டம் தான் முக்கியமான கூட்டம் என்றார்.
மேலும், கடந்த மக்களவைத் தேர்தலில் மதிமுக, தேமுதிகவின் கூட்டணி இல்லாவிட்டால் பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சராகியிருக்க முடியாது. வரும் சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் பூஜ்யத்தைத்தான் பாஜக பெறும் எனக் கூறினார்
திருமாவளவன் பேசுகையில், தேமுதிகவுடன் மக்கள் நலக் கூட்டணி, கூட்டணி வைக்கவில்லை. தொகுதிப் பங்கீடுதான் வைத்திருக்கிறோம் என்றார். மக்கள் நலக் கூட்டணி ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கடந்த 8 மாத காலமாக பாடுபட்டு வருகிறோம்.
இஸ்லாமிய கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் சிறுபான்மையினர் நலன் கருதினால் எங்கள் கூட்டணிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். தமாகா, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இன்னும் மெனமாக இருக்கின்றனர் என்றார் திருமாவளவன்.
வைகோ பேசும்போது, பணத்தை வைத்து கொண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெறலாம் என்று ஜெயலலிதா நினைக்கிறார். அது ஒரு போதும் நடக்காது. ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு பெரிய கண்டெய்னர் லாரி நேர் வழி பாதையில் போகாமல், கிராமங்கள் வழியாக பல்லாயிரக்கணக்கான கோடி பணத்துடன் சென்றது.
நேற்று (திங்கள்) சிறுதாவூர் பங்களாவில் 10 லாரிகள் நிறைய பணங்கள் கொண்டு சென்று பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அப்பாவிகளிடம் பத்தாயிரம், 20 ஆயிரம். 5 ஆயிரம் பணத்தை பறிக்கும தேர்தல் கமிஷன், உடனடியாக சிறுதாவூர் பங்களாவில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்தை சோதனையிட்டு கைப்பற்ற வேண்டும். அப்போதுதான் பணம் பட்டுவாடா இல்லாமல் தேர்தல் நேர்மையாக நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் கொடுத்திருக்கிறேன் என்று வைகோ கூறினார்.












Click it and Unblock the Notifications