விஜயகாந்த் கல்லூரி மைதானத்தில் இன்று தேமுதிக - ம.ந.கூட்டணி மாநாடு !
சென்னை: சென்னை அடுத்த மாமண்டூரில் உள்ள விஜயகாந்த் குடும்பம் நிர்வகிக்கும் ஆண்டாள்-அழகர் பொறியியல் கல்லூரி வளாகத்தில், இன்று தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. தற்போது இந்த கூட்டணியில் இணைந்துள்ள வாசன் தலைமையிலான தமாகாவும் கலந்து கொள்ள உள்ளது.
மாநாட்டில் போது, கூட்டணி சார்பாக போட்டியிட உள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட உள்ளோம் என்று மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்தார். விஜயகாந்த்தின் தேமுதிக கட்சி, மக்கள் நல கூட்டணி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது.
விஜயகாந்தின் கட்சிகள் தேமுதிக - 104, மதிமுக - 29, தமிழ் மாநில காங்கிரஸ் - 26, விடுதலைச் சிறுத்தைகள் - 25, இந்திய கம்யூனிஸ்ட் - 25, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 25 என்ற வகையில் தொகுதி உடன்பாடு செய்து கொண்டுள்ளன.
இந் நிலையில் இந்த கூட்டணியின் மாநாடு காஞ்சிபுரம் மாவட்டம், மாமண்டூரில் உள்ள ஆண்டாள்-அழகர் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. கூட்டணி உடன்பாடு முடிந்த நிலையில், யாருக்கு எந்த தொகுதி என்பது இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு இம் மாநாட்டில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இம் மாநாட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர். தற்போது இக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இணைந்துள்ளதால் அவரும் இக் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.