"ஆடி ஸ்பெஷல்"... வேப்பமரத்தில் கொட்டிய மழை... ஓடி வந்து பூஜை நடத்திய மக்கள்... ஆனால்!
சென்னை: ஆதம்பாக்கத்தில் வீட்டின் முன்பு இருந்த வேப்பமரம் ஒன்றில் மழை பெய்ததாக கூறி பக்தர்கள் வேப்ப மரத்திற்கு பூஜை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஆதம்பாக்கம் எல்.ஐ.சி. நகரில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான ஆறுமுகம் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு முன் பகுதியில் வேப்பமரம் உள்ளது. நேற்று அந்த பகுதியில் வெயில் சுட்டெரித்த போதிலும், அந்த வேப்பமரத்தில் மட்டும் இருந்து மழை பெய்வது போல் தண்ணீர் கொட்டியுள்ளது.

வழிபாடு செய்த பக்தர்கள்
வேப்பமரம் என்றால் மக்களுக்கு சொல்லவா வேண்டும், பெரும்பாலான கோயில்களில் வேப்பமரத்தை வணங்குகின்றனர் அல்லவா. இந்நிலையில், வேப்ப மரத்தில் மழை பொழிவதாக கூறி அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் அங்கு கூடினர். இந்த செய்தி காட்டுத் தீ போல அப்பகுதியில் உடனே பரவியது. தகவல் அறிந்து அக்கம் பக்கத்தில் இருந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் மரத்தைக் காண திரண்டனர். வேப்ப மரத்தில் இருந்து தான் மழை பொழிகிறது என நினைத்து அவர்கள் மரத்திற்கு கற்பூரம் காட்டி வழிபாடு செய்தனர்.

வீட்டு சுவரை இடிங்க 'பாஸ்'
இதற்கிடையே எல்.ஐ.சி. நகர் பின் பகுதியில் தனியாக கோவில் கட்டியுள்ள திருநங்கைகளும் அங்கு திரண்டனர். வேப்ப மரத்தில் மழையா! என வியந்து பார்த்த அவர்கள், மரத்தில் சாமி தான் இருக்கிறது எனகூறி இங்கு கோவில் கட்ட வேண்டும் எனவே வீட்டு முன்புற சுவரை இடிக்க வேண்டும் என்று கூறினார்களாம்.

'பல்ப்' வாங்கிய பக்தர்கள்
அதுமட்டுமல்லாமல், மாமல்லபுரத்தில் இருந்து சாமி சிலை ஒன்றையும் கொண்டு வந்து பூஜை செய்ய போவதாகவும் கூறினார்களாம். இந்நிலையில் வேப்பமரம் இருக்கும் ஆறுமுகம் வீட்டின் பக்கத்தில் குடியிருக்கும் டாக்டர் ஒருவரின் வீடு உள்ளது. அந்த வீட்டு மாடியில் இருந்த குடிநீர் பைப் உடைந்து வேப்ப மரத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது நீண்ட நேரத்திற்கு பின்னர் தெரியவந்தது.

ஏமாற்றம்
இதனால், அங்கு இருந்த பக்தர்கள் கற்பூரத்தை காட்டி வழிபாடு நடத்திவிட்டோமே என ஏமாற்றத்துடன் சென்று விட்டார்களாம். இச்சம்பவத்தால் ஆதம்பாக்கம் பகுதி சுமார் 3 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications