பொங்கலுக்கு முன்பு பேரறிவாளனை விடுதலை செய்ய தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள்
சென்னை: பொங்கலுக்கு முன்னதாக பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி அவரது தாயார் அற்புதம் அம்மாள் முதல்வர் அலுவலக தனிப்பிரிவில் இன்று மனு அளித்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் அளித்த கருணை மனு மீது குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்க தாமதமானதால் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் அவர்களை விடுவிப்பதாக தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என தீர்ப்பளித்தது.
இந்நிலையில், அரசியல் சாசனத்தின் 161வின் படி தனது மகனை விடுதலை செய்யுமாறு பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் இன்று முதல்வர் தனிப் பிரிவில் மனு அளித்தார்.
அந்த மனுவில் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த அதிகாரி தியாகராஜன், பேரறிவாளனின் வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்ததாக கூறியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
பேரறிவாளனின் நன்னடத்தையை கணக்கில் கொண்டும், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் பொங்கலுக்கு முன்பாக அவரை விடுவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications