பேரறிவாளனுக்கு விரைவில் பரோல் கிடைக்க வாய்ப்பு: அற்புதம்மாள் நம்பிக்கை
சென்னை: பேரறிவாளனுக்கு விரைவில் பரோல் கிடைக்க வாய்ப்புள்ளதாக, அவரது தாயார் அற்புதம்மாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்குத் தொடர்பாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சுமார் 25 ஆண்டுகளாக இவர்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள், பேரறிவாளனின் தங்கை அறிவுச் செல்வி, அவரது கணவர் தனசேகர் இவர்களது மகள் செஞ்சோலை ஆகியோர் இன்று மாலை சந்தித்தனர்.
சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அற்புதம்மாள், பேரறிவாளன் சிறையில் தாக்கப்பட்டதற்கு பின்பு பரோல் கிடைக்க வேண்டும் என கடந்த 19 ஆம் தேதி போயஸ் கார்டனில் முக்கியமான நபர்களிடம் மனு அளித்தோம், இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாகவும், அதற்குள் முதலமைச்சருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டாதால், பரோல் குறித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முதல்வரின் உடல் நிலை சரியாக இருந்திருந்தால் மனு அளித்த இரண்டு நாட்களில் பரோல் கிடைத்திருக்கும் என தெரிவித்த அற்புதம்மாள், மேலும் தன்னுடைய மகனுக்கு பரோல் வழங்க அனைத்து துறையினரும் பரிந்துரை செய்து இருப்பதாகவும் இதனால் விரைவில் பரோல் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறினார்.
முதல்வர் குணமாகி வந்தால் பேரறிவாளனுக்கு விடுதலை கிடைக்க வாய்ப்பு உள்ளது எனவும் அற்புதம்மாள் தெரிவித்தார். ஆனாலும் நாங்கள் விடுதலையை முன் வைக்கவில்லை, காரணம் விடுதலை தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது, அதனால் தான் நாங்கள் பரோல் கேட்கிறோம். எனவே அடுத்த வாரம் பரோல் நிச்சயமாக கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications