தீபாவிற்கு எதிராக தொண்டர்கள் போர்க்கொடி.. கணவர் சமாதானம்
தீபாவிற்கு எதிராக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் தொண்டர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்களை தீபாவின் கணவர் சமாதானம் செய்து வைத்தார்.
சென்னை: தொண்டர்களை ஆலோசிக்காமல் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவைக்கு நிர்வாகிகளை தீபா நியமித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தீபாவிற்கு எதிராக தொண்டர்கள் போர்கொடி உயர்த்தினர். இவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார் தீபாவின் கணவர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர், அவரின் அண்ணன் மகள் தீபாவுக்கு சசிகலா தலைமை பிடிக்காத அதிமுகவினர் ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து, தீபா, ஜெயலலிதாவின் பிறந்த தினமாக பிப்ரவரி 24ல் 'எம்.ஜி.ஆர். அம்மா தீபா' பேரவையைத் தொடங்கினார்.
மேலும், கட்சிக் கொடியை வெளியிட்டு, அவரது அத்தை மறைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார். அவர் தொடங்கிய அமைப்பின் பொருளாளராக செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
நியமனத்திற்கு எதிர்ப்பு
இதனையடுத்து, பேரவையின் தலைவராக சரண்யா, செயலாளராக ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.வி.ராஜா தீபாவுக்கு கார் ஓட்டுபவர் என்பதால் தொண்டர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தொண்டர்கள் மறியல்
செயலாளர் நியமிப்பதில் ஏற்பட்ட கடுப்பால் தீபா ஆதரவாளர்கள் அவரது வீட்டு முன் மறியலில் ஈடுபட்டனர். ஏ.வி.ராஜாவை செயலாளராக ஏற்க முடியாது என்று ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.
தீக்குளிக்க முயற்சி
போராட்டத்தின் போது, கலையரசி என்ற பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் தீபா வீட்டின் அருகில் பரபரப்பு ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர்.
கடுப்பான தீபா
இதனால் அதிர்ச்சி அடைந்த தீபா, பேரவைக்கு தற்காலிகமாக தானே செயலாளராக இருப்பதாக அறிவித்தார். நிர்வாகிகள் நியமனத்தில் தொடக்கத்திலேயே பிரச்சனை உருவானதால் மற்ற நிர்வாகிகளின் நியமன அறிவிப்பை தீபா தள்ளி போட்டுள்ளார்.
தீபாவிற்கு கடும் எதிர்ப்பு
இந்த நிலையில், நேற்று மாலை தீபா ஆதரவாளர்கள் மீண்டும் சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது வீட்டு முன் ஒன்று கூடினார்கள். அவர்கள் தீபாவை சந்தித்து தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூற முயற்சி செய்தனர். ஆனால் தீபாவை சந்திக்க முடியவில்லை. இதனால் கடுப்பான தொண்டர்கள் தீபாவை எதிர்த்து கோஷமிட்டனர். அவர்களை தீபாவின் கணவர் சமாதானம் செய்து வைத்தார்.
ஆலோசனைக்கு பின்..
ஆரம்ப கட்டத்திலேயே நிர்வாகிகள் நியமனத்துக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பதால் தீபா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் நிர்வாகிகளின் நியமனத்தில் நிதானமாக செயல்பட முடிவெடுத்துள்ளதாகவும், பகுதிவாரியாக தொண்டர்களிடம் ஆலோசனை செய்த பின்னரே நிர்வாகிகளை நியமனம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.