பள்ளிக்கு சொந்த நிலத்தை தானாமாக வழங்கியவர் பெரியபாண்டி - சொந்த ஊர் மக்கள் கண்ணீர்
சொந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காக 10 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியவர் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி என்று சாலைப்புதூர் கிராம மக்கள் கூறியுள்ளனர்.
சென்னை: ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த வன்னிக்கோனேந்தல் மூவிருந்தாளி அருகே உள்ள சாலைப்புதூர் கிராமம் ஆகும். இவர் தனது சொந்த நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ளார்.
கொளத்தூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக சென்ராம், சங்கர்லால் உட்பட 4 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளிகளான சென்ராமின் மகன் நாதுராம் மற்றும் தினேஷ் சவுத்ரியை பிடிக்க 6 பேர் கொண்ட தனிப்படையினர் ராஜஸ்தான் சென்றனர்.
ஜெய்ப்பூர் அருகே பாலி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் செங்கல்சூளையில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது, இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுள்ளது.

பெரியபாண்டி வீர மரணம்
தனிப்படையில் இடம்பெற்றிருந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டி உயிரிழந்தார். மேலும், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் காயமடைந்துள்ளார். ராஜஸ்தான் போலீசார் தமிழக போலீசாருக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்காததே ஆய்வாளர் பெரியபாண்டி உயிரழப்புக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

காக்கிச் சட்டை காதலன்
04-03-1969 ஆம் ஆண்டு பிறந்தவர் பெரியபாண்டி. 2000 ஆண்டு போலீஸ் வேலைக்கு தேர்வான பெரியபாண்டி திருச்சியில் பயிற்சி பெற்றார். அங்கு பயிற்சியை முடித்த அவர் மணிமுத்தாறு பட்டாலியனில் போலீஸ்காரராக பணிக்கு சேர்ந்தார். பின்பு தேர்வு எழுதி சப் இன்ஸ்பெக்டர் ஆனார். காக்கிச்சட்டையை காதலித்துள்ளார் பெரியபாண்டி.

சோகத்தில் சொந்த ஊர்
அதன் பிறகு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று சென்னையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற இடத்தில் அக்கும்பலால் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை கேள்விபட்டதும் இன்ஸ்பெக்டரின் சொந்த ஊரான சாலைப்புதூர் கிராமமக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மனைவி, மகன்கள்
பெரியபாண்டியின் மனைவி பானு ரேகா, சுந்தர சோளபுரம் அரசு பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ரூபன் மற்றும் ராகுல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது தந்தை செல்வராஜ். தாயார் ராமாத்தாள். பெரும் நிலக்கிழாரான செல்வராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். ரூபன் கல்லூரியிலும், ராகுல் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டிக்கு, ஜோசப், அந்தோணிராஜ் என்ற சகோதரர்களும், சுந்தரத்தாய், சீனித்தாய், சகுந்தலா என்ற சகோதரிகளும் உள்ளனர்.

பள்ளிக்கு நிலம் தானம்
தனக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தை சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ளார் பெரியபாண்டி. அவர் நேர்மையானவர் என்றும் உதவி என்று கேட்பவர்களுக்கு உதவி செய்வார் என்றும் சொந்த ஊர் மக்களும் அவரது நண்பர்களும் கண்ணீருடன் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications