நீட்: திமுக மனித சங்கிலி போராட்டத்துக்கு தடை கோரிய மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி!
திமுக சார்பில் நாளை நடைபெற உள்ள மனிதசங்கிலி போராட்டத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கேட்டு திமுக சார்பில் நாளை நடைபெற உள்ள மனித சங்கிலி போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திமுக சார்பில் நாளை தமிழக தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது தான் நுழைவுத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக நீட் தேர்வுக்கு எதிராக திமுக போராட்டம் அறிவித்துள்ளது, இது மற்ற மாநிலங்களுக்கு தூண்டுதலாக அமையும். எனவே இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் கேட்டுக் கொண்டார்.
இது அவசர வழக்காக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி முன்பு பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், திமுக மனித சங்கிலி போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி தரவில்லை என்று கூறினார். இதையடுத்து அரசு அனுமதி மறுத்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தார்.