மனைவியைக் கருணைக் கொலை செய்யக்கோரும் கணவர்... கை, கால்கள் செயலிழந்ததால்!
மதுரை: கை, கால்கள் செயலிழந்த மனைவியைக் கருணைக் கொலை செய்யக் கோரி, மதுரை ஹைகோர்ட் கிளையில் தஞ்சாவூரைச் சேர்ந்த ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பூவாலூரைச் சேர்ந்தவர் பி.மதிவாணன். இவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
எனது மனைவி பெயர் சுமதி (33). எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். என்னுடைய மனைவிக்கு கடந்த வருடம் திடீரென கை, கால்கள் செயல் இழந்தன. அவரை சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கும்படி, டாக்டர்கள் அறிவுரை வழங்கினார்கள். அங்கு அவரை அழைத்துச் செல்வதற்கு என்னிடம் போதிய வசதியில்லை.
இதனால் அரசு செலவில் என் மனைவியை சென்னை ராஜீவ்காந்தி நினைவு மருத்துவனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டருக்கும், முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கும் மனு அனுப்பினேன்.
இருந்தபோதும், எனது மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என் மனைவியை சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்து அவர் குணமடையும் வரை அரசு செலவில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அவரை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்' என இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நேற்று நீதிபதி ஆர். மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.