ஹெச்.ராஜா வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. மர்ம நபர்களுக்கு வலை வீச்சு
காரைக்குடி : பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா வீட்டின் மீது நேற்று இரவு, பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்குடி சுப்பிரமணியபுரம் 10-வது வீதியில் எச்.ராஜா வீடு உள்ளது. அவர் சென்னையில் இருப்பதால், அவரது சகோதரர் பாஸ்கர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ராஜா, காரைக்குடி வந்தால் கட்சி பணிகளை இந்த வீட்டில் இருந்து கவனிப்பார். இங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு, வைரவபுரம் பகுதியில் இருந்து வந்த இருவர் பெட்ரோல் குண்டை வீசி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இதையடுத்து சப்தம் கேட்டு வந்த போலீசார் தீயை அணைத்தனர்.
இதுகுறித்து பேசிய எச்.ராஜாவின் சகோதரர் மனைவி ஜானகி சில ஆண்டுகளுக்கு முன் இதே போல பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், ஒன்றரை ஆண்டுக்கு முன், கண்டனுாரில் உள்ள எச்.ராஜாவின் தோட்டத்திற்கு அரிவாளுடன் சென்ற நபர்கள், காவலாளியை மிரட்டிச் சென்றதாகவும் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து பேசிய ஹெச்.ராஜா, காலை தான் சென்னைக்கு வந்ததாகவும், தான் அங்கிருப்பதாக நினைத்துக்கொண்டு குண்டு வீசியிருக்கலாம் என்றும் தெரிவித்தார். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் எனவும் அவர் கூறினார்.

காரைக்குடியில் எச்.ராஜா மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பா.ஜ.க, தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications