திமுக முன்னாள் நிர்வாகி வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு: காதல் விவகாரம் காரணமா?
கரூர்: கரூரில் திமுக முன்னாள் நிர்வாகியின் வீட்டில் நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.
கரூர் வெங்கமேடு எஸ்.பி. காலனி 3வது தெருவில் வசிப்பவர் குமார்(45). திமுக முன்னாள் நிர்வாகி. அவர் தற்போது பைனான்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். அவரது மனைவி திலகவதி. அவர்களுக்கு அனிதா என்ற மகள் உள்ளார்.
நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் குமாரின் வீட்டுக்கு போன் வந்தது. அப்போது தூங்கிக் கொண்டிருந்த குமார் போன் சத்தம் கேட்டு எழுந்து தொலைபேசியை எடுத்து பேசினார். மறுமுனையில் பேசிய பக்கத்துவீட்டுக்காரர் உங்கள் வீட்டு போர்டிகோவில் நிற்கும் பொலிரோ ஜீப் மற்றும் பைக் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குமார், அவரது மனைவி மற்றும் மகள் வெளியே வந்து பார்த்தபோது வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. உடனே அவர் இது குறித்து வெங்கமேடு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையம் ஆகியவற்றுக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அதற்குள் வாகனங்கள் எரிந்து நாசமாகின.
இது குறித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறுகையில்,
நள்ளிரவு 1 மணிக்கு டமார் என்ற சத்தம் கேட்டு நாங்கள் எழுந்து வந்து பார்த்தோம். அப்போது குமார் வீட்டுப் பக்கத்தில் இருந்து சிலர் ஓடினார்கள். இரவு நேரம் என்பதால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை என்றனர்.
இந்நிலையில் குமாரின் வீட்டுக்கு வந்த போலீசார் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதை கண்டுபிடித்தனர். மேலும் குமார் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி குமார் கூறுகையில்,
எனது உறவினரின் மகள் கீர்த்தனாவை காதலித்த வாலிபர் காளிதாஸ் அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார். கீர்த்தனாவுக்கும், தனக்கும் திருமணம் நடந்துவிட்டதாக போஸ்டர் ஒட்டினார். இந்த விஷயத்தில் நான் கீர்த்தனாவுக்கு ஆதரவாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.
இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ் மற்றும் அவரின் ஆட்கள் தான் பெட்ரோல் குண்டை வீசியிருக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications