காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது... உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இலங்கை தலைநகர் கொழும்பில் வருகின்ற 15 ஆம் தேதி காமன்வெல்த் நாடு தொடங்குகிறது. இலங்கை போரில், தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டிக்கும் வகையில், இம்மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த மாநாட்டை இந்தியா முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த வழக்கறிஞர் ராய்ஸ் இம்மானுவேல் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ''வருகிற 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மான நகலை பாராளுமன்ற செயலாளர், ஜனாதிபதியின் செயலாளர், பாராளுமன்ற இரு அவைகளுக்கும் தமிழக சட்டப்பேரவை செயலாளர் அனுப்பி உள்ளார். ஆனால், மத்திய அரசு தெளிவான பதிலை தெரிவிக்கவில்லை.
இது, 8 கோடி தமிழர்களின் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்களுக்கு மத்திய அரசு மரியாதை கொடுக்காததையே காட்டுகிறது. இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசிடம் இருந்து உரிய விளக்கங்களை பெற்று அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications