விவசாயிகள் தற்கொலையை தடுக்க ஐகோர்ட்டில் பொது நல வழக்கு… விளக்கம் கேட்டு அரசுக்கு நோட்டீஸ்
விவசாயிகள் தற்கொலையை தடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு வருகின்றனர். இதனை தடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில், விவசாயிகள் தற்கொலையை தடுக்க மாநிலம் முழுவதும் குழு அமைக்க வேண்டும் என்றும், பருவமழை பொய்க்கும் போது நவீன தொழில் நுட்பத்தின் மூலம் விவசாயத்தைக் காக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் விவசாயத்தை காக்க, விவசாயிகள் தற்கொலையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
இதனையடுத்து, விவசாயிகள் செய்து கொள்ளும் தற்கொலைகள் தொடர்பான விளக்கத்தை 4 வாரத்திற்குள் தமிழக அரசு தர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.