கார், வேன்களில் டிவிடி பிளேயரை நீக்கக் கோரி வழக்கு... சென்னை உயர்நீதிமன்றத்தில்!
சென்னை: கார்கள், வேன்களில் டிவிடி பிளேயர் பொருத்தப்படுவதை தடை செய்ய வேண்டும். அவற்றை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசின் போக்குவரத்துத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுரேஷ் என்பவர் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கார் மற்றும் வேன் முன்பகுதியில் டிவிடி பிளேயர் பொருத்தப்பட்டு, வாகனத்தில் செல்லும்போதே சினிமாக்களை பார்க்கும் வசதி அதிகரித்துவிட்டது. இது போக்குவரத்து விதிகளுக்கு எதிரானது.

இதனால் மற்ற வாகனங்களில் செல்வோருக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு, விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே அவற்றிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் விபத்து குறித்து எந்த புள்ளிவிவரத்தையும் தரவில்லை. இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை குறித்து வரும் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications