லிங்கா திருட்டு விசிடியை பிடித்துக் கொடுங்கள் - ரசிகர்களுக்கு வேண்டுகோள்
லிங்கா படத்தின் திருட்டு விசிடி பற்றிய தகவல் அறிந்தால் உடனே தொடர்பு கொண்டு உதவுமாறு ரஜினி ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் லிங்கா படக்குழுவினர்.
ரஜினி நடித்துள்ள 'லிங்கா' படம் கடந்த 12-ந்தேதி ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியைரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.

படம் வெளியான ஓரிரு நாட்களிலேயே இதன் திருட்டு சி.டி.ககளும் வெளிவந்தன. தமிழகம் முழுவதும் அமோகமாக திருட்டு சி.டி.க்கள் விற்பனையாவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை பர்மா பஜாரிலேயே லிங்கா திருட்டு சி.டி.க்கள் விற்பனையாகின்றன. ஒரு சி.டி.யின் விலை ரூ.100 என நிர்ணயித்து விற்கிறார்கள்.
இந்த சி.டி.க்களை கடைகளுக்குள் ரகசியமாக பதுக்கி வைத்து வியாபாரம் செய்கிறார்கள். ஆந்திராவிலும் லிங்கா படத்தின் தெலுங்கு சி.டி.க்கள் விற்பனையாகின்றன.
லிங்கா சி.டி.க்களை விற்றதாக ஒருவரை ஆந்திர போலீசார் கைது செய்தனர். அவரிடம் 41 ஆயிரம் புதுப்பட சி.டி.க்கள் இருந்துள்ளன. அவற்றில் 3000 சி.டி.க்கள் விங்கா பட சி.டி.க்கள் ஆகும்.
திருட்டு சி.டி.யை தடுக்கும்படி ரஜினி ரசிகர்களுக்கு லிங்கா படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் படத்தை வாங்கி வெளியிடும் ஈராஸ் இன்டர்ஷேனல் வேந்தர் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், "உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தின் உரிமம் பெறாத திருட்டு சி.டி.க்கள் தமிழகமெங்கும் சட்ட விரோதமாக வினியோகம் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறது.
சூப்பர் ஸ்டாரின் ரசிக கண்மணிகளாகிய நீங்கள் அவ்வாறு வினியோகம் செய்பவர்களை கண்டுபிடித்து காவல் துறையில் புகார் செய்து ஒப்படைக்குமாறு சட்டப்படி நடவடிக்கை எடுத்து லிங்கா திரைப்படத்தின் வெற்றிக்கு உதவுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.ஒத்துழைப்பு தரும் ஒவ்வொருவரையும் நாங்கள் கவுரவிக்க காத்து இருக்கிறோம்," என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications