முதல்வர் ஜெ.வுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் மத்திய அரசின் உதய் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சென்னைக்கு வருகை தந்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் இன்று பிற்பகல் பங்கேற்றார்.

பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து மாலை 5.45 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள உதய் திட்டத்தை தமிழக அரசு அப்படியே ஏற்க முன்வரவில்லை. அதில் சில திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்பது குறித்து முதல்வர் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது உதய் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மற்ற மாநிலங்களுக்கு காற்றாலை மின்சாரத்தை விற்பனை செய்வது தொடர்பாக பசுமை வழித்தடத்தை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.
முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடிவதில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் போயஸ் தோட்ட இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதாவை இன்று பியூஷ் கோயல் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications