கோவையில் பிளாஸ்டிக் உபயோகித்தால் “அபராதம்” – மாநகராட்சி அதிரடி அறிவிப்பு
கோவை: கோவை நகரில் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்தாலோ, குப்பைகளை வீதியில் வீசி சுற்றுச்சூழலை மாசு ஏற்படுத்தினாலோ அபராதம் விதிக்க அம்மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிறுவனங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அங்கு தடையை மீறி பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதித்தும், பிளாஸ்டிக் பைகளைப் பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்தனர்.

பயன்பாடு அதிகரிப்பு:
இருப்பினும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரித்து கழிவுநீர் செல்லும் சாக்கடைகளில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு பொதுச்சுகாதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது.

உற்பத்திக்கு தடை:
அதனால் 40 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு விற்பனை மற்றும் உபயோகப்படுத்த தடை விதித்து கோவை மாநகராட்சியில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அபராதம் விதித்து உத்தரவு:
அதன்படி பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் , மொத்த விற்பனையாளருக்கு 50 ஆயிரம், சில்லரை விற்பனையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹோட்டல்களிலும் தடை:
மேலும் ஹோட்டல்களின் பரப்புக்கு ஏற்ப 500 சதுர அடிக்குள் இருந்தால் ஆயிரம் ரூபாய், இரண்டாயிரம் சதுர அடி வரை இருந்தால் 2500 ரூபாய், இரண்டாயிரம் சதுர அடிக்கு மேல் இருந்தால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தடையை மீறியும் இது தொடர்ந்தால் லட்சங்கள் வரையில் அபராதம் விதிப்பதற்கு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாடு குறையும்:
இதன் மூலம் கோவை மாநகராட்சியில் பிளாஸ்டிக் மீதான தடை இறுகுவதுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இது எவ்வளவு தூரத்திற்கு நடைமுறைக்கு வருகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications