நாளை முதல் கனமழை பெய்யும், ஆனா, வெள்ளம்லாம் வராது... நம்பிக்கை தரும் "வெதர்மேன்"
கடந்தாண்டைப் போல் இந்தாண்டும் வெள்ளம் வரும் என்ற புரளியை மக்கள் நம்ப வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை: கடந்தாண்டைப் போலவே நாளை பெய்ய இருக்கும் கனமழையால் வெள்ளம் வரலாம் என யாரும் அஞ்சத் தேவையில்லை என தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
மழை என்று வந்து விட்டாலே பலருக்கும் ரமணன் நினைவுக்கு வருவார்கள். ஆனால், சமூக வலைத்தளவாசிகளுக்கு தமிழ்நாடு வெதர்மேன் போடும் பதிவுகள்தான் நினைவுக்கு வரும். கடந்தாண்டு சென்னை வெள்ளம் வந்த போது அவர் போட்ட பதிவுகள் பலருக்கும் உதவி செய்தது. எனவே, இந்தாண்டும் இவரது பேஸ்பும் பக்கத்தை பலரும் கவனித்து வருகின்றன.
இந்நிலையில், நாளை முதல் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்தாண்டும் இதே டிசம்பர் 1ம் தேதி கனமழை பெய்ததால் சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்தச் சூழ்நிலையில் இந்த ஆண்டும் அதே நாள் கனமழை பெய்ய இருப்பதால் மக்கள் மத்தியில் வெள்ளம் குறித்த பீதி அதிகரித்துள்ளது.
ஆனால், இந்த பீதி தேவையற்றது, தேவையற்ற புரளிகளைப் பரப்ப வேண்டாம் என தனது பேஸ்புக் பக்கத்தில் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

முதல் காற்றழுத்த தாழ்வு நிலை...
வடகிழக்குப் பருவ மழை தொடங்கிய பிறகு தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் முதல் காற்றழுத்த தாழ்வு நிலை இதுதான். முன்பு உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலைகளும் வேறு திசையில் நகர்ந்ததால், தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவியது.

கரையைக் கடக்கும்...
தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, டிசம்பர் 1ம் தேதி தமிழ்நாடு கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேகமாக காற்று வீசும்...
இது டிசம்பர் 1 அல்லது 2ம் தேதி நாகப்பட்டினம் மற்றும் சென்னைக்கு இடையே கரையை கடக்கலாம். அப்போது கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும்.

புரளியை நம்ப வேண்டாம்...
சென்னை வரலாற்றில், இந்த நவம்பர் மாதம்தான் மிகவும் வறட்சியான மாதமாக பதிவாகியுள்ளது. ஆனால், அதே சமயம், இந்த டிசம்பர் 1ம் தேதி பெய்யும் கன மழை காரணமாக நிச்சயம் வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை. கடந்த ஆண்டைப் போல வெள்ளம் ஏற்படும் என்று புரளியை நம்ப வேண்டாம்.

பலத்த மழை பெய்யும்...
அதே சமயம், சென்னை முதல் நாகப்பட்டினம் வரையிலான பகுதிகளில் பலத்த மழை பெய்யும். கடலூர் முதல் புதுசேரி வரையில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம். டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும்.

படிப்படியாக மழை குறையும்...
டிசம்பர் 2ம் தேதி தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். படிப்படியாக அடுத்தடுத்து நாட்களில் மழை குறையும். 2 மற்றும் 3ம் தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications