பிரதமர் மோடி நாளை சென்னை வருகை.. முதல்வர் ஜெ.வுடன் சந்திப்பு? அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி உதயம்?
சென்னை: சென்னைக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவாரா? இந்த சந்திப்பு மூலம் சட்டசபை தேர்தலில் அண்ணா தி.மு.க.- பாரதிய ஜனதா இடையே கூட்டணிக்கு வித்திடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் கைத்தறி நெசவாளர்கள் விழா சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்திருந்தார். அவர் நேரடியாக மதுரைக்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபத்தை சென்றடைந்தார். பின்னர் சாலைவழியே கலாம் இறுதிச் சடங்கு நடைபெற்ற பேக்கரும்பு கிராமத்து சென்றார். ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா இதில் கலந்து கொள்ளவில்லை.

பிரதமர் மோடி வருகை
இந்த நிலையில் மீண்டும் பிரதமர் மோடி தமிழகத்துக்கு நாளை வருகை தர உள்ளார். பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் கடந்த ஆண்டு ஜூன் 30-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டா செல்லும் வழியில் சென்னைக்கு பிரதமர் வருகை தந்திருந்தார். அப்போது விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியை சந்தித்து வரவேற்றிருந்தார்.

விமான நிலையத்தில் சந்திப்பு?
தற்போது பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக முதல் முறையாக நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வருகை தருவது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மரபுகளின்படி பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் ரோசையா மற்றும் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வரவேற்க வேண்டும். அனேகமாக ஜெயலலிதா விமான நிலையத்துக்கு சென்று பிரதமர் மோடியை வரவேற்க வாய்ப்பிருக்க இருக்கிறது.

போயஸ் தோட்டத்தில் பிரதமர் மோடி?
அத்துடன் பிரதமர் மோடி பங்கேற்கும் சென்னை பல்கலைக் கழக வளாக நிகழ்ச்சிக்கு தமிழக கைத்தறித்துறை அமைச்சர் கோகுல இந்திரா அனுப்பிவைக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதற்கு அப்பால் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் நரேந்திர மோடி போயஸ் தோட்டத்துக்கு நேரில் சென்று சந்திக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஏற்கெனவே சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டபோது அதை வரவேற்று வாழ்த்து தெரிவித்திருந்தவர் பிரதமர் மோடி.

அதிமுகவுடன் இணக்கம்..
தற்போது ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியான அண்ணா தி.மு.க.வின் ஆதரவைப் பெறும் வகையில் பிரதமர் மோடியே போயஸ் தோட்டம் இல்லம் சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்பிருக்கிறது.

அதிமுக- பாஜக கூட்டணி?
அத்துடன் தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தற்போது ஜெயலலிதாவை நேரில் சந்திப்பதன் மூலம் அண்ணா தி.மு.க.- பா.ஜ.க. இடையே சட்டசபை தேர்தலுக்கான கூட்டணிக்கு அச்சாரம் போடவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
விடியக் காத்திருக்கும் பரபரப்பு!












Click it and Unblock the Notifications