மோடி திடீர்னு இப்படி சொல்லலாமா? திண்டாடும் சிறு வணிகர்கள்
500,1000ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளது சிறு வணிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : மோடி திடீர் என்று 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கூறியது கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிறு வணிகர்களும், ஆட்டோ டிரைவர்களும் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு 8.30 மணியளவில் டிவியில் பேசிய மோடி, நவம்பர் 8 நள்ளிரவு முதல் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதை கேட்டவுடன் மக்களிடையே பதற்றமும், பரபரப்பும் அதிகரித்தது. மோடியின் அறிவிப்பினை அடுத்து உடனடியாக அருகில் உள்ள ஏடிஎம் மையங்களில் 100 ரூபாய் நோட்டுக்களை எடுக்க பலரும் குவிந்தனர். இதனால் கூட்டம் அதிகரித்தது. ஏடிஎம் மையங்கள் செயலிழந்ததால் மூடப்பட்டது.
சென்னையில் உள்ள பெரும் பணக்காரர்கள் கைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பெட்டிகளில் வைத்திருந்தவர்கள் நகைக்கடைகளை நோக்கி ஓடினர்.
எப்படியாவது நகையை விற்றால் போதும் என்று நகை கடை உரிமையாளர்கள் பணத்தை பெற்று கொண்டு நகையை விற்றனர். அதே நேரத்தில் சில்லறை வியாபாரிகள், அன்றாடம் பொருட்களை விற்றுப் பிழைக்கும் சாமான்ய மக்களுக்குத்தான் அச்சம் அதிகரித்தது.

பால் வாங்க முடியலையே
இரவு பல மணி நேரம் தூங்காமல் பணத்தை எடுத்தவர்கள் பாடு பரவாயில்லை. ஆனால் 500 ரூபாய் நோட்டுக்களை கைகளில் வைத்துக்கொண்டிருந்தவர்கள் காலையில் பால் வாங்குவது எப்படி என்று யோசனையுடனேயே தூக்கத்தை தொலைத்தனர். பால் விற்பனை மையங்களில் போய் காலை நேரத்தில் 500 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் தவித்தனர்.

சிறு வியாபாரிகள் திண்டாட்டம்
சென்னையில் கீரை வியாபாரிகள், காய்கறி வியாபாரிகளின் பாடுதான் படு திண்டாட்டமாகிப் போனது. கோயம்பேடு சந்தையில் போய் சில்லறை வியாபாரிகள் காய்கறிகள், வெங்காயம், கீரைகள் வாங்கிவிட்டு 500 ரூபாய் நோட்டை கொடுத்தால் மொத்த விற்பனையாளர்கள் வாங்கவில்லை என்றும், இரண்டு நாள் கழித்து பணத்தை கொடுத்தால் போதும் என்று கூறிவிட்டதாக வெங்காய வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
கீரைக்காரம்மாவின் குமுறல்
மோடி திடீர்னு இப்படி பண்ணலாமா? நாங்க எல்லாம் எங்க போறது. திடீர்னு 100 ரூபாய், 50 ரூபாய் மட்டுமே செல்லும் என்று சொன்னால் எங்களுக்கு சிரமம்தானே. எங்களிடம் இருக்கும் 500 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் தவித்து வருகிறோம் என்பது அன்றாடம் கீரை, காய்கறி விற்கும் பெண்களின் குமுறலாகும்.

பெட்ரோல் பங்கில் மாற்றுவோம்
அதே நேரத்தில் தங்களிடம் கொடுக்கும் 500 ரூபாய் பணத்தை பெட்ரோல் பங்கில் கொடுத்து மாற்றிவிட்டதாக ஆட்டோ டிரைவர் ஒருவர் கூறியுள்ளார். மோடியின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்பது அவரது கருத்தாகும்.

ஏழைங்களுக்கு சிரமம் இல்லை
500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று கூறியதால் அதிக அளவில் பணத்தை கையில் வைத்திருக்கும் பணக்காரர்கள்தான் பயப்பட வேண்டும். இல்லாத ஏழைகளுக்கு எதுவும் இல்லை. வழக்கம் போல எங்களின் வாழ்க்கை ஓடுகிறது என்பது தையல் கடைக்காரர்களின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications