முதல்வர் வேட்பாளர் அன்புமணி கவனத்திற்கு... பாமக கூட்டணிக்கு ஆதரவு 2.2 சதவிகிதம் மட்டுமே
சென்னை: சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணிக்கு வெறும் 2.2 சதவிகிதம் மக்கள் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ள ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வகம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற பாமக தருமபுரியில் வென்றது. லோக்சபா தேர்தலில் வென்றதன் மூலம் முதன்முறையாக மக்களவைக்குள் எம்.பியாக நுழைந்தார் அன்புமணி.

அதே ஆண்டிலேயே அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிட்டு சட்டசபை தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது பாட்டாளி மக்கள் கட்சி. மாநிலம் முழுவதும் பல கட்டங்களாக மண்டல மாநாடுகளை நடத்தியது.
எங்கள் தலைமையை ஏற்பவர்களுடன்தான் கூட்டணி என்று கூறி வரும் டாக்டர் ராமதாஸ், மக்களை சந்தித்து அதிமுக, திமுகவிற்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் பாமக கூட்டணியில் இணைய யாரும் வந்ததாக தெரியவில்லை.
இந்த நிலையில் லயோலா கல்லூரியின் ராஜநாயகம் தலைமையிலான குழு நடத்திய கருத்துக்கணிப்பில், பாமக கூட்டணிக்கு வெறும் 2.2 சதவிகித மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இன்றைய சூழ்நிலையில் தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, பா.ம.க.வுக்கு 3.2 சதவீதம் பேர் வாக்களிப்பதாக கூறியுள்ளனர்.
திமுக, அதிமுக உடன் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இணையும் என்று தெரியாத நிலையில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. மக்கள் ஆதரவை பெறாத கட்சிகள் முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications