திராவிட கட்சிகளுக்கு பாமக தான் மாற்று: பயணிப்போம் நேர்மையான பாதையிலே...சொல்கிறார் அன்புமணி
சென்னை: திமுக, அதிமுக திராவிட கட்சிகள் இரண்டுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தான் மாற்று என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது:
பாட்டாளி மக்கள் கட்சியின் ஆணி வேராகவும்,உயிர் மூச்சாகவும் விளங்குகின்ற என அன்புத்தம்பிகள், தொண்டர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து கலங்கிப்போயிருப்பதை உணர்கிறேன்.

இரவும் பகலும் அயராது உழைத்த உழைப்பு வீணாகிப்போனதாக நினைக்கிறீர்கள்! 23 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நமக்கு வாக்களித்திருக்கிறார்கள். நம்மிடமிருந்து எந்த இலவசத்தையும் எதிர்பார்க்காமல், பணத்தை எதிபார்க்காமல் திமுக, அதிமுக மற்றும் பிற கட்சிகள் லஞ்சமாகக் கொடுத்த பணத்தையும் மீறி நம் மேல் நம்பிக்கை வைத்து மக்கள் நமக்காக அளித்த உண்மையான வாக்குகள் அவை.
நாம் அதிர்ச்சியடைந்ததை விடவும் நடுநிலையாக இருந்து வாக்களித்த அனைவருமே நமக்காக அனுதாபப்படுகிறார்கள். நேர்மையான முறையில் தேர்தலை சந்தித்து குறுக்கு வழியில் வெற்றியைப் பெற்றிருக்கின்ற திராவிடக் கட்சிகள் இரண்டுக்கும் நாம்தான் மாற்று என்பதை நாம் சொன்னதுபோலவே நிரூபித்துக்காட்டியிருக்கிறோம்.
நம் மக்களுக்கு படிப்பறிவைத் தராமல் அவர்களின் உழைப்பை உறிஞ்சி, மதுவைக்கொடுத்து, இலவசங்களை கொடுத்து மதி மயக்கி வைத்திருக்கிறார்கள். நாம்தான் அறியாமையில் இருக்கின்ற நம் மக்களுக்கு விழிப்புணர்ச்சியைத் தந்து இந்த இரண்டு கெட்ட சக்திகளிடமிருந்தும் மீட்டெடுக்க வேண்டும்.
இதுவரை நாம் உழைத்தது பத்தில் ஒரு பங்குகூட இல்லை. இனிமேல் தான் நம் மக்களை மீட்டெடுத்து உண்மையான ஜனநாயகத்தை நிறுவ வேண்டும். என அன்புத்தம்பிகள் தயவுகூர்ந்து யார் மனதும் புண்படும்படி ஒரு சொல்லையோ வெறுப்பைத்தரும் உணர்ச்சியையோ காண்பிக்காதீர்கள். நீங்கள் யார் மேல் கோபமாக இருக்கிறீர்களோ அவர்கள் எல்லாம் நம்முடன் வந்தால்தான் நாம் நினைக்கின்ற இலக்கை அடைய முடியும்.
இப்போது நமக்கு ஏற்பட்டிருக்கின்றத் தோல்வி என்பது நமக்கு ஏற்பட்ட தோல்வி இல்லை. ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட தோல்வி இது! பயணிப்போம் நேர்மையான நம் பாதையிலேயே! தொடர்ந்து என்னோடு கைகோர்த்து வாருங்கள்! வெற்றி வெகு தூரத்தில் இல்லை!! இவ்வாறு அன்புமணி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications