பொங்கலுக்குப் பின் பாமக வேட்பாளர் பட்டியல்- அன்புமணி ராமதாஸ்
சேலம்: பொங்கல் பண்டிகைக்கு பிறகு பாமக வேட்பாளர்கள் பட்டியல் முறைப்படி அறிவிக்கப்படும் என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பாமகவில் இணையும் விழா சேலத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் இளைஞர் அணித்தலைவரும், முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், பா.ம.கவை குறைகூற முடியாத சிலர் ஜாதி கட்சி என்ற வதந்தியை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார். குறிப்பாக பா.ம.க தலித் மக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்று கூறிய அன்புமணி, ஜாதி பெயரால் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் அமைப்புகளை மட்டுமே பா.ம.க எதிர்ப்பதாக தெரிவித்தார்.

மேலும், கடந்த காலத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடு கூட்டணி வைத்ததற்கு மன்னிப்பு கோரிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்றார்.
தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் பலர் பா.ம.க.வில் இணைந்தனர். வரும் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் பா.ம.க.வின் வேட்பாளர் பட்டியல் முறைப்படி வெளியிடப்படும் என்று தெரிவித்த அன்புமணி ராமதாஸ், இதில் 50 சதவீதம் இளைஞர்கள் மற்றும் பெண்கள் இடம்பெறுவர் என்றார். தமிழகத்தில் ஊழல் அமைச்சர்கள், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு சிறை செல்வது உறுதி என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications