சென்னை மருத்துவ கல்லூரியில் '1960' மாணவர்கள் “ரீயூனியன் மீட்”- நண்பர்களைச் சந்தித்த டாக்டர் ராமதாஸ்
சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரியில் கடந்த 1960 ஆம் ஆண்டில் மருத்துவம் படித்த மாணவர்களின் மறு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கல்லூரியின் முன்னாள் மாணவரான பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களும் கலந்து கொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடி மகிழ்ந்தார்.
சென்னை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவக்கல்லூரி முன்னாள் மாணவரும், மயக்க மருந்துத்துறை மருத்துவருமான பாலகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார்.
காலை 9.30 மணிக்கு, சென்னை மருத்துவக்கல்லூரி முன்னாள் மாணவரும், பா.ம.க நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் கோட் சூட் அணிந்தபடி வந்தார். அவரை முன்னாள் மாணவர்கள் சூழ்ந்து கொண்டனர். 50 வருடங்களுக்கு முன்பு தங்களுடன் படித்தவர்களை பார்க்கும் ஆவலில் டாக்டர் ராமதாஸ் இருந்தார். அனைவரையும் சந்தித்து நலம் விசாரித்து, கட்டிடத்துக்குள் சென்றார்.
முன்னாள் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கப்பட்டது. அந்த கையேட்டில் 1960 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் எடுத்த "குரூப் போட்டோ" இடம் பெற்றிருந்தது.
சந்திப்பிற்கு பின் பேட்டியளித்த அவர், "முன்னாள் மாணவர் சந்திப்பு என்பது மிகவும் உற்சாகமான தருணம். எங்களுடன் படித்த சிலர் இப்போது உயிருடன் இல்லை என்று நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. இங்கு அனைவரும் நலமாக நல்ல நிலையில் உள்ளார்கள் என்று பார்க்கும்போது மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சந்திப்பில் எங்களது பழைய நினைவுகள், சாகசங்கள், வீரதீர பராக்கிரம செயல்களை எண்ணி, எங்களுக்குள்ளேயே கிண்டலடித்து மகிழ்ச்சி அடைந்தோம்.
இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த டாக்டர் பாலகிருஷ்ணனுக்கு மனதார நன்றி கூறுகிறேன். வெளிநாடுகளிலும் நடந்த மாணவர் சந்திப்புக்கு நான் போகாவிட்டாலும், நலம் விசாரித்திருக்கிறேன். எம்.எம்.சியில் படிப்பது பெருமை என்று மார்தட்டி நாங்கள் சொல்லிய காலங்களும் உண்டு. படிக்கும்போதே திருமணம் செய்த கொண்டவர்களில் நானும் ஒருவன். கல்லூரி நினைவுகளை என்றுமே நான் மறப்பது இல்லை" என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் நிறைவில் அனைவரும் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தன்னுடன் படித்த மாணவர்கள் அனைவருக்கும் லேப் டாப் பேக்கினை நினைவு பரிசாக டாக்டர் ராமதாஸ் வழங்கி மகிழ்ந்தார்.