வாவ்.. 2 தொகுதிகளில் தப்பிப் பிழைத்த பாமக.. "டம்மி"கள் வேட்பாளர்களானார்கள்!
சென்னை: 4 தொகுதிகளில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை இழந்த அதிர்ச்சியில் இருந்த பாமகவுக்கு நேற்று ஒரு இன்ப அதிர்ச்சியாக 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தும் வாய்ப்பு கிடைத்து சற்று ஆறுதல் அடைந்தது.
பாமக இந்த சட்டசபைத் தேர்தலில் தனித்துப்போட்டியிடுகிறது. தேவையே இல்லாமல் ராமநாதபுரம், கன்னியாகுமரி வரைக்கும் வேட்பாளர்களை அறிவித்து கலக்கியது.

இந்த நிலையில் அக்கட்சிக்கு அதிர்ச்சி தரும் வகையில், தூத்துக்குடி (சேசையா பெர்னார்ட்), திருச்செந்தூர் (உஜ்ஜால் சிங்), துறையூர் (வசந்த்), ராமநாதபுரம் (அப்துல் லத்தீப்) ஆகிய தொகுதிகளில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தவறுகள் காரணமாக நிராகரித்தது தேர்தல் ஆணையம்.
இதனால் நான்கு தொகுதிகள் குறைந்து 230 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் நிலை பாமகவுக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக நேற்று தூத்துக்குடி, திருச்செந்தூருக்கு அக்கட்சிக்கு வேட்பாளர்கள் கிடைத்து விட்டனர்.
தூத்துக்குடியில் டம்மி வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த சின்னத்துரை மற்றும் திருச்செந்தூர் டம்மி வேட்பாளர் குமரகுருபர ஆதித்தன் ஆகியோரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து இத்தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.
அதேசமயம், துறையூர் தொகுதியில் பாமக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த டம்மி வேட்பாளர் அருணின் வேட்பு மனுவும் நேற்று தள்ளுபடியானதால் துறையூரில் அக்கட்சியால் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
ராமநாதபுரத்தில் பாமக டம்மி வேட்பாளரை நிறுத்தாத காரணத்தால் அங்கும் அக்கட்சி போட்டியிட முடியாமல் போய் விட்டது.
விடுங்க பாஸ்.. காசு மிச்சம்னு நினைச்சுக்குங்க!












Click it and Unblock the Notifications