பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி சென்னையில் ராமதாஸ் ஆர்ப்பாட்டம்- நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!
சென்னை: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற சாப்ட்வேர் என்ஜினியர் ஜூன் 24-ந் தேதி கொலை செய்யப்பட்டார். காதலிக்க மறுத்ததற்காக விழுப்புரத்தில் நவீனா என்ற ஏழை மாணவி தீ வைக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான வன்முறை தடுக்கப்பட வேண்டும், பெண்கள் அச்சமின்றியும், சுதந்திரமாகவும் வாழ்வதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று ஐ.நா. உடன்படிக்கைகள் வலியுறுத்துகின்றன. அதன்படி, தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.
மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று காலை டாக்டர் ராமதாஸ் தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
பாமக தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பாமகவினர் கலந்து கொண்டனர்
டிவியில் அக்கப் போர்
பாமகவின் போராட்ட செய்தியை வெளியிட்ட சன் நியூஸ், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதாக கூறியது. ஆனால் புதிய தலைமுறையோ இப்படி ஒரு நிகழ்வே சென்னையில் நடந்ததாக போடவே இல்லை.
ஏற்கனவே புதிய தலைமுறை நிறுவனர் பச்சமுத்துவுக்கும் டாக்டர் ராமதாஸுக்கும் மோதல் இருந்து வருகிறது. இந்த மோதலில் டாக்டர் ராமதாஸை சன் நியூஸ் ஆதரித்து முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகிறது.
இதற்கு பதிலடியாக கலாநிதி மாறன், தயாநிதி மாறன் மீதான வழக்குகளை இடைவிடாமல் போட்டு ஒளிபரப்புகிறது புதிய தலைமுறை. தற்போது ராமதாஸ் போராட்டத்திலும் இந்த அக்கப்போர் எதிரொலித்துள்ளது.












Click it and Unblock the Notifications