தமிழகத்தில் பா.ஜ.க.வை விட பெரிய கட்சி பா.ம.க- புதிய கூட்டணி உருவாகும்: அன்புமணி ராமதாஸ்!
சென்னை: தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியைவிட பாட்டாளி மக்கள் கட்சியே பெரிய கட்சி.. தங்களது கட்சி தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்று அதன் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் இன்று கூறியதாவது:
2016-ம் ஆண்டு தேர்தலில் பா.ம.க. முதல்வர் வேட்பாளராக எங்கள் கட்சியின் பொதுக்குழு என்னை தேர்வு செய்து உள்ளது. வருகிற தேர்தலில் மது ஒழிப்பு, ஊழல் ஆகிய 2 முக்கிய பிரச்சினைகளை முன் வைத்து மக்களை சந்திப்போம்.

ரூ1 லட்சம் கோடி கடன்
கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, தொழில் முதலீடு ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுப்போம். சுதந்திரத்திற்கு பிறகு 2011-ம் ஆண்டு வரை தமிழகம் வாங்கிய கடன் ரூ.1 லட்சம் கோடி.

அதிமுக அரசின் 78 ஆயிரம் கோடி கடன்
ஆனால் அ.தி.மு.க. பதவிக்கு வந்த 4 ஆண்டுகளில் 78 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது. இதற்கு காரணம் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. இதைத்தான் பட்டியலிட்டு ஆளுநரிடம் மனு கொடுத்து உள்ளோம். அவரும் அரசிடம் பதில் கேட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளார்.

மாற்றத்தை விரும்பும் மக்கள்
தி.மு.க., அ.தி.மு.க. ஆண்டது போதும். இனி ஒரு மாற்றம் வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள். மக்கள் விரும்பும் மாற்றத்தை எங்களால் கொடுக்க முடியும்.

பூரண மதுவிலக்கு
டெல்லியில் மக்கள் மாற்றத்தை விரும்பியதால் ஆம் ஆத்மிக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மது விலக்கு அமல்படுத்துவது தான்.

பெரிய கட்சி
தற்போது தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று உள்ளோம். அது நீடிக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரை எங்கள் கட்சி பாரதிய ஜனதாவை விட பெரிய கட்சி. எங்கள் தலைமையில் ஒரு கூட்டணி உருவாகும்.

மருத்துவருக்கு ஒரு வாய்ப்பு
இதுவரை அறிஞருக்கு, கலைஞருக்கு, நடிகருக்கு, நடிகைக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தீர்கள். இனி ஒரு மருத்துவருக்கு வாய்ப்பு தாருங்கள் என்று மக்களிடம் கேட்போம்.

குடும்ப ஆட்சி கிடையாது
எங்கள் கட்சியில் குடும்ப ஆட்சி முறை இல்லை. என் தந்தை எந்த பதவியிலும் இல்லை. எனவே மற்ற கட்சிகளோடு எங்கள் கட்சியை ஒப்பிட முடியாது. இன்றைய சூழ்நிலையில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

நல்ல நிர்வாகம் தர முடியும்
நான் மத்திய அமைச்சராக இருந்தபோது பல சாதனைகளை செய்து உள்ளேன். என்னால் தமிழ்நாட்டில் நல்ல நிர்வாகத்தை தர முடியும்.

விஜயகாந்தை நம்பினார்கள்..
கடந்த தேர்தலில் விஜயகாந்த் ஒரு மாற்றத்தை தருவார் என்று மக்கள் நம்பினார்கள். 10 சதவீத வாக்கு அளித்தார்கள். ஆனால் அந்த நம்பிக்கை ஈடேரவில்லை. அந்த கட்சியின் வாக்கு வங்கியும் குறைந்து விட்டது.

நாங்கதான் மாற்று
எங்களால் மட்டுமே தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக இருக்க முடியும். ஒவ்வொரு தொகுதிக்கும் சுற்றுப்பயணம் செய்வேன். எங்கள் கொள்கைகளை எடுத்து சொல்வேன். மக்கள் வாய்ப்பு தருவார்கள் என நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அன்புமணி கூறினார்.












Click it and Unblock the Notifications