வேண்டா வெறுப்பாக கூட்டணியில் சேர்ந்து ஒரு இடத்தில் மட்டும் வெல்லும் பாமக!
சென்னை: தேமுதிகவுக்கு பாமக பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு லோக்சபா தேர்தலில் தர்மபுரியில் வெல்லும் நிலையில் உள்ளது பாமக.
தேமுதிகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத நிலையில், பாமகவால் ஒரு இடத்திலாவது வெல்ல முடிந்தது அக்கட்சியினரை உண்மையிலேயே ஆறுதல்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் மூலம் வட மாவட்டங்களில் தாங்கள்தான் செல்வாக்கானவர்கள் என்பதையும் மறைமுகமாக நிரூபித்துள்ளது பாமக.

குறைந்த வாய்ச்சவடால்
தேமுதிகவைப் போல வாய்ச் சவடால் அதிகம் பேசாத கட்சி பாமக என்றாலும் வேண்டா வெறப்பாக, வேறு வழியில்லாமல்தான் பாஜக கூட்டணிக்கு வந்தது.

வந்த இடத்தில் தேடிவந்த அவமானங்கள்
வந்த இடத்தில் அதை தேமுதிக பல ரூபங்களில் அவமானப்படுத்தியது. இதனால் கூட்டணியை விட்டு வெளியேறும் மனோ நிலைக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தள்ளப்பட்டபோதும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ்தான் கட்டாயப்படுத்தி, தாஜா செய்து ராமதாஸை அமைதிப்படுத்தினார்.

8 இடங்களில் போட்டி
இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 8 இடங்கள் கிடைத்தன. அதில் அக்கட்சிக்கு தற்போது தர்மபுரியில் மட்டுமே வெற்றி கிடைக்கிறது.

தேமுதிகவுக்காக தாரை வார்த்து
தேமுதிகவுக்காக சேலம் உள்ளிட்ட சில முக்கியத் தொகுதிகளை தாரை வார்த்துக் கொடுத்தது பாமக. அங்கெல்லாம் தற்போது தேமுதிக மண்ணைக் கவ்வியுள்ளதால், பாமகவினர் கைங்கர்யம் அதில் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தனித்து நின்றால் போண்டிதான்
தனித்து நின்றால் இந்த வெற்றி கூட கிடைத்திருக்காது பாமகவுக்கு. மாறாக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் ஒரு இடமாவது அதற்குக் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தேமுதிகவை வென்றது ஆறுதலே
ஒரு இடத்தில் மட்டுமே பாமகவுக்கு வெற்றி கிடைத்தாலும் கூட அது மத்திய அமைச்சர் பதவியாக மாறக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் பாமகவுக்கு நிச்சயம் இது மகிழ்ச்சி தருவதே ஆகும்.












Click it and Unblock the Notifications