மதுரையில் பாமக மண்டல மாநாடு – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
மதுரை: பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மதுரையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி பாண்டிய மண்டல மாநாடு நடத்தப்பட உள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், சேலத்தில் பாட்டாளி மக்கள் சார்பில் மாநாடு நடைபெற்றது. ஜெயங்கொண்டத்தில் மே 17ஆம் தேதி சோழ மண்டல மாநாடு நடைபெற்றது. அதேபோல கோவையில் ஜூலை மாதம் மண்டல மாநாடு நடைபெற உள்ளது. வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி மதுரையில் பாண்டிய மண்டல மாநாடு நடைபெறும் என கூறினார்.
திமுக, அதிமுகவிற்கு மாற்றாக பாட்டாளி மக்கள் கட்சி செயல்படும் என்று கூறிய டாக்டர் ராமதாஸ், சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் மாநாடுகள் நடத்தி வருவதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் நல்லாட்சி அமைய பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடுகிறது என்று கூறிய டாக்டர் ராமதாஸ், நல்லாட்சியை பாமக மட்டுமே தரமுடியும் என ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார். மாநாடு தொடர்பான பணிகளுக்காக இனி அடிக்கடி மதுரைக்கு வருவோம் என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.