வாக்கு சீட்டு முறையை வலியுறுத்தி 22–ந்தேதி போராட்டம்: ராமதாஸ்
சென்னை: தேர்தலில் வாக்குச் சீட்டு முறையையே நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 22-ந் தேதி போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முறைகேடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கும் ஏராளமான புகார்கள் அனுப்பப்பட்டும் அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பண விநியோகம்
தேர்தலில் பண விநியோகம் செய்யப்பட்டதை தடுக்க முடியவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

மின்னணு வாக்குப்பதிவில் முறைகேடு
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் பெரும்பாலான வாக்குகள் குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளருக்கு வாக்குகள் பதிவாகும் வகையில் செய்ய முடியும் என்பதை அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக் கழகமும், ஹைதராபாத்தைச் சேர்ந்த நெட் இந்தியா நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஒரே கட்சிக்கே வாக்குகள்
அஸ்ஸாம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட சில வாக்குப்பதிவு எந்திரங்களில் அனைத்து வாக்குகளும் ஒரே கட்சிக்கு பதிவானதை தேர்தல் ஆணையமே ஒப்புக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் முறைகேடு
அதேபோல்தான் தமிழ்நாட்டிலும் வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற உறுதியான சந்தேகம் எழுந்துள்ளது. உலகில் இந்தியாவை விட அதிக வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன் படுத்தப்படவில்லை.

வாக்குச் சீட்டு
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தாய் என போற்றப்படும் இங்கிலாந்தில் கூட மக்களவைத் தேர்தல்களில் வாக்குச்சீட்டுகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. ஜெர்மனியிலும், ஹாலந்திலும் வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் செய்ய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டபிறகு அந்த நாடுகள் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாறியுள்ளன.

விசாரணை நடத்த வேண்டும்
எனவே, தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் நடந்த மோசடிகள் பற்றி விசாரணை நடத்த வேண்டும்.

22-ந் தேதி ஆர்ப்பாட்டம்
இனிவரும் தேர்தல்களில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் வரும் 22 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தொடர் முழக்க அறப்போராட்டம் நடைபெறவுள்ளது.

சென்னையில் ராமதாஸ்
சென்னையில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன். மற்ற மாவட்டங்களில் கட்சியின் மாநில நிர்வாகிகள் தலைமையேற்பார்கள். பா.ம.க. மற்றும் அதன் துணை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications