தமிழகத்தில் ஒரு சொட்டு மதுகூட இருக்கக் கூடாது.... மதுரை ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி
மதுரை: தமிழகத்தில் ஒரு சொட்டு மதுகூட இருக்கக் கூடாது என்பதே பாமகவின் நோக்கம் என்று மதுரையில் நடைபெற்ற மதுவிலக்கு கோரும் ஆர்ப்பாட்டத்தில் பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
மதுரை பழங்காநத்தத்தில் இன்று பாமகவின் மகளிரணி சார்பில் மதுவிலக்கு கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கிய பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
தமிழகத்தில் அதிகம் பேர் பாதிக்கப்படுவது மதுவால் தான். தமிழ்நாட்டில் ஒரு சொட்டு மது கூட இருக்க கூடாது என்பதே எங்களது நோக்கமாகும்.

பாமக ஆட்சி....
இன்னும் சில மாதத்தில் சட்டசபை தேர்தல் வரஉள்ளது. இதில் பா.ம.க. வெற்றி பெறுவது உறுதி. பாமக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து மதுவை ஒழிப்பதே ஆகும்.

34 வருஷமாக போராட்டம்...
34 ஆண்டுகளில் மதுவை எதிர்த்து போராடிய தலைவர் டாக்டர் ராமதாஸ் தான். அதேபோல் மதுவை ஒழிக்க போராடி வருவது பாமகதான். கடந்த 50 ஆண்டுகளில் அதிமுக, திமுக 2 கட்சிகள் தமிழர்களின் வாழ்க்கையை சுரண்டி விட்டது. தற்போது பிள்ளைகளும் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

எத்தனை தொழிற்சாலைகள்..
இன்று தமிழகத்தில் 12 மது தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 4 திமுக, 3 அதிமுக, 2 காங்கிரஸ் கட்சியினருக்குச் சொந்தமானது. ஆகையால் அவர்களால் மதுவை ஒழிக்க முடியாது.

பாமகவால்தான் முடியும்...
இந்திய அளவில் தமிழகத்தில்தான் விதவைகளும், விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. இதற்கு காரணம் மது. பாமகவால்தான் மதுவை ஒழிக்கவே முடியும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications