தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பா.ம.க. தனித்துப் போட்டி: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
மதுரை: தமிழகத்தில் 2016ல் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பா.ம.க. தனித்துப் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் பா.ம.க. எங்கள் அணிக்கு வரும் என, பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறி இருப்பது நிறைவேறாத ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் கூறியதாவது:
விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் கைவிடப்படும் என பிரதமர் அறிவித்தார். இதனால் விளை நிலத்திற்கான ஆபத்து விலகிவிட்ட நிலையில் அதைவிட பெரிய ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
மத்திய திட்ட நிதி ஆணைய துணை தலைவர் கூறும்போது, தேசிய அளவில் நிலம் கையகப்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டு விட்டதால் மாநிலங்கள் தங்கள் இஷ்டம்போல் தனித்தனியே நிலம் கையப்படுத்தும் திட்டத்தை நிறை வேற்றிக் கொள்ளலாம் என அறிவித்திருக்கிறார்.
தமிழக அரசு சில திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தி உள்ளது. இது சிறப்பாக இருப்பதாகவும், அதைபோல மற்ற மாநிலங்களும் இதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கூறி கூறி இருக்கும் கருத்து மிகவும் ஆபத்தானதாகும்.
நிலம் கையகப்படுத்தும் மசோதா
நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டு வந்தால் விவசாயம் அழிந்துவிடும். விவசாயிகளிடம் நிலத்தை வாங்கும்போது அவர்களுக்கு மறுவாழ்வு, மறு குடியமர்த்துதல் ஆகியவற்றை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். நிலத்தை கையகப்படுத்தும்போது நிலத்தின் சொந்தக்காரருக்கு 10 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும். இதில் 5 மடங்கு பணமாகவும், 5 மடங்கு சம்பந்தப்பட்ட நிலத்தில் தொடங்கப்பட உள்ள நிறுவனத்தில் பங்குகளாகவும் வழங்க வேண்டும்.
தொலைநோக்குத்திட்டம்
தமிழகம் முதன்மை மாநில மாக்கப்பட, தொலைநோக்கு திட்டம் 2020 என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. 2012 மார்ச் மாதம் இந்த திட்டம் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தை நிறைவேற்ற ரூ.15 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை ஆண்டுகளில் 4.77 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
முதல்வர் வெளியிடுவாரா?
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் 217 கட்டமைப்பு திட்டங்களில் 84 திட்டப் பணிகள் தொடங்கி விட்டதாக அறிவித்திருக்கிறார். இது உண்மை என்றால் அவை எவையெவை? இத்திட்டத்திற்கு எத்தனை கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதா? என்பதை அவர் வெளியிட வேண்டும்.
கிரானைட் முறைகேடு
மதுரை மாவட்டத்தில் கிரானைட் கொள்ளையில் ஒரு நிறுவனம் நில உச்ச வரம்பை மீறி ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பில் 24 ஆயிரத்து 300 ஏக்கர் நிலத்தை குவித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. உச்சவரம்பு சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நிலத்தைவிட அதிகப்படியாக குவித்துள்ள நிலத்தை பறிமுதல் செய்து ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும்.
விசாரணை தேவை
தனியார் நிறுவனம் 1500 மடங்கு நிலம் வாங்க எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கிரானைட் முறைகேடு குறித்து கடந்த 10 மாதமாக விசாரணை நடத்தி வரும் சகாயம் குழு வருகிற 15ம்தேதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கிரானைட் குவாரிகள் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஆவின் பால் கொள்முதல்
பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை தடுக்க அவர்கள் வழங்கும் அனைத்து பாலையும் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்ய வேண்டும். தமிழகத்தில் சென்னை, கோவை பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன.
வேலைவாய்ப்பு
தென்மாவட்டங்களில் தொழிற்சாலைகள் இல்லாத நிலையில் புறம்போக்கு நிலங்களே உள்ளது. அங்கு தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். இதனால் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும்.
234 தொகுதிகள்
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று அணியாக பா.ம.க. உள்ளது. எங்கள் தலைமையை ஏற்று யார் வந்தாலும் நாங்கள் வரவேற்போம். தேர்தல் நேரத்தில் பா.ம.க. எங்கள் அணிக்கு வரும் என, இல.கணேசன் கூறி இருப்பது நிறைவேறாத ஒன்றாகும். 234 தொகுதிகளிலும் நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனை பா.ம.க. நிறைவேற்றும்.
மருத்துவ வசதி
பிறந்த குழந்தை முதல் அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க தரமான கல்வி வேண்டும். அதனை நாங்கள் வழங்குவோம். ஜனாதிபதிக்கு கிடைக்கும் மருத்துவ வசதி ஏழைகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுவோம். எங்களது கட்சியின் தென்மாவட்ட மண்டல மாநாடு அடுத்த மாதம் திருநெல்வேலியில் நடக்கிறது. திருச்சியில் இந்த மாதம் மாநாடு நடக்கிறது என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.