ராமதாஸ் படித்தவர், பண்பாளர்.. கூட்டணியிலிருந்து விலக மாட்டார்: இல.கணேசன் நம்பிக்கை!
திருச்சி: தமிழ்நாட்டில் பா.ஜ.க கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி விலகாது என்று பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை முகாமைத் தொடக்கி வைத்து இல.கணேசன் பேசும்போது, ''தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு தற்போது 10 லட்சம் உறுப்பினர்கள் உள்ள நிலையில் அந்த எண்ணிக்கையை 1 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
தமிழக மின்வாரியத்துக்கு ஏற்படும் இழப்பை சரி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் தலையில் சுமையை ஏற்றியிருக்கிறது. மின் கட்டண உயர்வை பா.ஜ.க கண்டிக்கிறது.
பா.ஜ.க கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி விலகாது. அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் படித்தவர், பண்பாளர். அந்த கட்சி பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகுவதற்கான காரணங்கள் ஏதுமில்லை.
பிரதமர் நரேந்திர மோடி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல என்ற ராமதாஸின் கருத்துக்கு எனக்கு உடன்பாடு உண்டு. நாகரீகமான முறையில் விமர்சிக்க வேண்டும் என்ற கருத்தை அவர் வலியுறுத்தி வருகிறார்.
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளர் என்ற நிலையை யார் முன் வைக்கிறார்கள் என்பதை பார்த்துதான் தேர்தலில் போட்டியிடுவது குறித்த நிலைப்பாட்டை பா.ஜ.க இறுதி செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.