Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வன்னியர் வாக்குகளை மட்டுமே முழுமூச்சாக நம்பி தனித்து களமிறங்கும் பா.ம.க...

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருப்பது பாட்டாளி மக்கள் கட்சிதான். மாம்பழ சின்னத்தையும் கட்சி அங்கீகாரத்தை தக்க வைக்கவும் அத்தனை வியூகங்களுடன் களத்தில் நிற்கிறது பா.ம.க.

தமிழகத்தில் அ.தி.மு.க.- தி.மு.கவுக்கு மாற்று என்ற கோஷத்துடன் முதன் முதலில் களத்துக்கு வந்தது பாட்டாளி மக்கள் கட்சிதான். 1989ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலை முதல் முறையாக எதிர்கொண்டது. 32 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு 5.82% வாக்குகளைப் பெற்று அ.தி.மு.க, தி.மு.கவை மிரட்டியது.

பின்னர் 1991 சட்டசபை தேர்தலில் அதிரடியாக 194 இடங்களில் போட்டியிட்டு 1 இடத்தில் வென்றது. அந்த தேர்தலிலும் பா.ம.கவின் வாக்கு சதவீதம் 5.89%. 1996 சட்டசபை தேர்தலில் திவாரி காங்கிரஸுடன் 116 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க. 4 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் அதன் வாக்கு சதவீதமோ 3.84% என்றாக சுருங்கியது.

பறிபோன யானை

பறிபோன யானை

அதே 1996 லோக்சபா தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.கவால் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை. வாக்கு சதவீதம் 2.03% என கட்டெறும்பாகிப் போனது. இதனால் அந்த கட்சி வசம் இருந்த "யானை" சின்னம் பறிபோனது.

கூட்டணிகளுடன்

கூட்டணிகளுடன்

அதுநாள் வரை தனித்தே போட்டி என பேசிவந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், கூட்டணிகளை மாற்றி மாற்றி அமைத்தார். 2001-ல் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து 27 இடங்களைப் பெற்று 20 தொகுதிகளை வென்றது பா.ம.க. அப்போது அதன் வாக்கு சதவீதம் 5.65% என ஜம்ப் ஆனது.

2006ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் 31 தொகுதிகளைப் பெற்று 18 இடங்களில் வென்றது பா.ம.க. அந்த தேர்தலில் பா.ம.கவுக்கு பலத்த அடியைக் கொடுத்தது தே.மு.தி.க. 12 தொகுதிகளில் பா.ம.க. வேட்பாளர்களின் வெற்றியை தவிடுபொடியாக்கியது தே.மு.தி.க. இருந்தபோதும் அதன் வாக்கு சதவீதம் 5.65% என்ற நிலைமை இருந்தது.

2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்குப் போன பா.ம.க, 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. அணிக்கு திரும்பியது. 30 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி வென்ற தொகுதிகள் 3 மட்டுமே.. அத்தேர்தலில் பா.ம.க. வாக்கு சதவீதம் 5.23%

லோக்சபா தேர்தல்களில்...

லோக்சபா தேர்தல்களில்...

லோக்சபா தேர்தல்களிலும் 1998 முதல் 2009 வரை மாறி மாறி கூட்டணி வைத்தது பா.ம.க. 1998-ல் 6.05%; 1999-ல் 8.21%; 2004-ல் 6.71% ; 2009-ல் 4.59% என குறைந்தது வாக்கு வங்கி.

கடந்த 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு 1 இடத்தில் வென்ற பா.ம.க.வின் வாக்கு சதவீதம் 4.4%

ஆக கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் பா.ம.க.வின் வளர்ச்சி என்பது தலைகீழாகிப் போய் மீண்டும் 1991ம் ஆண்டு நிலைமையில் இருக்கிறது.

அங்கீகாரம், சின்னம்

அங்கீகாரம், சின்னம்

ஒரு மாநில கட்சிக்கான அங்கீகாரம் என்பது 6% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது மொத்தம் உள்ள எம்.எல்.ஏ.க்களில் 3% பேர் அல்லது குறைந்தபட்சம் 3 எம்.எல்.ஏக்கள் இருக்க வேண்டும். இதனடிப்படையில் பா.ம.க.வுக்கு இப்போது மாநிலக் கட்சி அங்கீகாரமும் இல்லை; மாம்பழ சின்னமும் இல்லை.

சுயேட்சைகளைப் போல...

சுயேட்சைகளைப் போல...

2014 தேர்தலில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி மாம்பழ சின்னத்தை எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒதுக்க வேண்டும் என்று கேட்டுப் பெறப்பட்டது. அதாவது சுயேட்சைகளுக்கு எப்படி சின்னங்கள் ஒதுக்கினார்களோ அதுபோலத்தான் பா.ம.கவுக்கும் ஒதுக்கப்பட்டது.

தற்போதைய நிலையில் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தையும் சின்னத்தையும் பெற வேண்டிய நெருக்கடி பா.ம.கவுக்கு உள்ளது. அத்துடன் மாறி மாறி கூட்டணி வைத்து வன்னியர்களிடம் இழந்துவிட்ட நம்பிக்கையை மீட்டெடுத்தாக வேண்டிய கட்டாயமும் பா.ம.கவுக்கு இருக்கிறது.

8 எம்.எல்.ஏ.சீட் இலக்கு

8 எம்.எல்.ஏ.சீட் இலக்கு

பா.ம.கவைப் பொறுத்தவரையில் வடமாவட்டங்களில் குறைந்தது 60 தொகுதிகளில் தீர்மானிக்கும் சக்தியாக இருப்போம்; இதில் 8 முதல் 15 இடங்களில் வென்றாக வேண்டும் என்பதுதான் வியூகம். கடந்த லோக்சபா தேர்தலில் தருமபுரி தொகுதியில் முழுமையாக ஜாதிய வாக்குகளை மட்டுமே பா.ம.க. நம்பியது... அறுவடையும் செய்தது.

வன்னியர் வாக்கு மட்டுமே

வன்னியர் வாக்கு மட்டுமே

அதேபோல்தான் தற்போதும் வன்னியர் வாக்குகளை மட்டுமே பா.ம.க. நம்பி களமிறங்கியுள்ளது. இதனால்தான் பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்; பா.ம.க. தலைமையிலேயே கூட்டணி என்று அறிவித்தது.

இப்போதைய நிலையில் ஒரு அரசியல் கட்சி கூட பா.ம.க. பக்கம் போக தயாராக இல்லை. வைகோவின் மக்கள் நலக் கூட்டணியோ பா.ம.கவுடன் கூட்டணியே இல்லை பிரகடனமே செய்துவிட்டது. பாரதிய ஜனதா கட்சியோ எங்கள் தலைமையிலான கூட்டணியில் இருந்து கொண்டு நீங்கள் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கலாம் என்கிறது.

தருமபுரி பார்முலா

தருமபுரி பார்முலா

பா.ம.க. மிகத் தெளிவாக இருக்கிறது... இப்படி நாம் அறிவிப்பு வெளியிட்டால் ஒரு அரசியல் கட்சியும் வரப்போவது இல்லைதான்... ஆனால் வன்னியர்களிடம் நாம் தனித்து நிற்கிறோம்... சொந்தங்களே உங்களை மட்டுமே நம்பி நிற்கிறோம்..என்ற உருக்கமான பிரசாரத்துக்கு உதவும் என்பதுதான்.

இதன்மூலம் தர்மபுரியில் ஜெயித்தது மாதிரி வன்னிய சமூக மக்களின் பெருவாரியான வாக்குகளை பெற்றுவிடலாம் என பாமக நினைக்கிறது. தனக்குத் துணையாக ஆங்காங்கே இருக்கும் ஜாதிய அமைப்புகளையும் சேர்க்கவும் முடிவு பாமக செய்துள்ளது. பா.ம.கவுடன் கை கோர்க்க காத்திருக்கும் ஜாதிய அமைப்புகள் விஷயத்தை கசியவிட்டால் எங்கே தி.மு.க, அ.தி.மு.க,, அவற்றை வளைத்துவிடுவார்களோ எனவும் அச்சப்படுகிறது அந்த கட்சி.

ஆக அக்னி பரீட்சையாகத்தான் பா.ம.கவுக்கு 2016 சட்டசபை தேர்தல் அமைந்திருக்கிறது...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+