காவிரி: ஏப். 5-இல் திமுக அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பாமக ஆதரவு
ஏப்ரல் 5ம் தேதி மத்திய அரசைக் கண்டித்து திமுக அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பாமக ஆதரவு அளித்துள்ளது.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஏப்ரல் 5ம் தேதி திமுக அறிவித்துள்ள மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பாமக முழு ஆதரவு அளிக்கும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் அதனைத் தொடர்ந்து தாமதப்படுத்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதேபோல, அதிமுக சார்பிலும் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர் போராட்டங்களினால் மத்திய அரசுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.
இப்போராட்டத்திற்கு பா.ம.க. ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி அந்த அமைப்பின் தலைவர் விக்கிரமராஜா எனக்கு கடிதம் எழுதி இருந்தார். அதேபோல், வரும் 5ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நடத்தப்படவுள்ள பொது வேலைநிறுத்தத்திற்கு பாம.கவின் ஆதரவைக் கேட்டு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் ,காவிரி உரிமைகளை மீட்பதற்கு அரசியல் என்றும் தடையாக இருக்கக்கூடாது என்பதே பாமகவின் நிலைப்பாடு. அதனால் அதை மதித்து காவிரி தொடர்பாக நடத்தப்படும் அனைத்து போராட்டங்களுக்கும் பாமக ஆதரவு அளிக்கும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications